×

நியாய வாடகைக் குழு நிர்ணயிக்கும் வாடகை கோயில் நிலங்களில் குடியிருக்கும் வாடகைதாரர்களிடம் வசூலிக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டிக்கும் நியாய வாடகைக் குழு நிர்ணயிக்கும்  வாடகை திருக்கோயில் நிலங்களில் குடியிருக்கும் வாடகைதாரர்களிடம் வசூலிக்கப்படும்.  மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.கஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (30.07.2022) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் அமைந்துள்ள திருக்கோயில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளரிடம் பேசினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள் தலைமையில் அமைந்த அரசு பொறுப்பேற்று 14 மாத காலம் முடிவடைவதற்குள்ளாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள பல்வேறு திருக்கோயில்களுக்கு  நேரடியாக சென்று ஆய்வு செய்து திருப்பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, குடமுழுக்கு  நடைபெறாமல் அதிக ஆண்டுகள் நிலுவையில் இருக்கின்ற திருக்கோயில்களுக்கு ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்க வேண்டிய குடமுழுக்கு பணிகள், குடமுழுக்குக்கு முன்பாக நடைபெற வேண்டிய திருப்பணிகள் எந்தெந்த திருக்கோயில்களில் எல்லாம் நடைபெறவில்லை என்பது இந்து சமய அறநிலையத்துறையின் குறிப்புகளில் இருந்தாலும் அந்த திருக்கோவில்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு, பக்தர்கள், இறை அன்பர்கள் மகிழ்ச்சியோடு  இறைவனை வழிபட தேவையான வசதிகளை செய்திட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டதன் பேரில் இதுவரையில் இந்த ஓராண்டில் 200க்கும் மேற்பட்ட திருக்கோவில்களுக்கு  கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைக்கு மயிலாடுதுறை மாவட்டம், கருவாழக்கரை அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், சீர்காழி அருள்மிகு சட்டநாதசுவாமி திருக்கோயில், திருவெண்காடு, அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் மற்றும் உதவி பெறும் அரசு மேல்நிலைப்பள்ளி, கீழப்பெரும்பள்ளம், அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் ஆகியவற்றையும், தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு மணிமண்டபம் ஒரு கோடி ரூபாயில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் துளசியாப்பட்டினத்தில் ஔவையார் மணிமண்டபம் கட்டப்படவுள்ள இடத்தினையும், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களையும் ஆய்வு செய்தோம்.

திருவாரூர் தியாராஜ சுவாமி திருக்கோயிலின் நடைபாதைகளை முழுவதுமாக கற்களால் அமைக்கப்படுகின்ற பணிக்கு சுமார் 5.5 கோடி ரூபாய்  ஒதுக்கீடு செய்து, பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.  இந்த திருக்கோயில் சுற்றி  அதிக அளவு இருள் சூழ்ந்த நிலை இருப்பதை மாற்றி முழுவதுமாக மின்சாரம் ஒளி பெறுகின்ற வகையில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து சுற்று பிரகாரத்தை சுற்றிவரும் வகையில் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் மின்சார அமைப்புகளை முழுமையாக மாற்றி ஒளி வெள்ளத்தில் இந்த திருக்கோயில் இருக்கின்ற அளவிற்கு பல்வேறு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.

அதேபோல் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையின்படி, மனுநீதி சோழன் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை விளக்குகின்ற அந்த மணிமண்டபம் ரூ.29 லட்சம் செலவில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது அதற்கு கூடுதலாக  நிதி தேவைப்படும் எனினும் சுற்றி இருக்கின்ற அனைத்து சுவர்களையும் திருக்கோயிலின் தொன்மை மாறாமல் சுற்றுச்சுவரை எழுப்பி,   தொல்லியல் துறையோடு இணைந்து பழுது பார்க்கின்ற பணியினையும் மேற்கொள்ள இருக்கின்றோம்.  கமலாலய குளம் என்ற பிரசித்தி பெற்ற இந்த குளத்தில் படிக்கட்டுகள் இல்லாத இடங்களில்  ஏதாவது ஒரு வகையில் பெரும் மழை வெள்ளம் ஏற்படும் பொழுது  சரிந்து வருகின்ற நிலையில் இருக்கின்றது. அதனை  ஆய்வு செய்து, செப்பனிட்டு இந்த முறை திருத்தேரை ஓட்டுவோம் என்றும் சொன்னோம்.  அதன்படி  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடும் சட்டமன்ற உறுப்பினர் திரு.பூண்டி கலைவாணன் அவர்களின் உதவியோடும் பாதையை செப்பனிட்டு திருத்தேரும்   ஓடியிருக்கிறது.

இன்றைய சுற்றுப்பயணத்தில்   சட்டப்பேரவை உறுப்பினர்கள் திரு.பூண்டி கலைவாணன், திரு.நிவேதா எம். முருகன், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின்  தலைவர்  திரு.கௌதமன், சட்டப்பேரவை உறுப்பினர் திரு.மாரிமுத்து ஆகியோர்  பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கின்றனர். அவைகள் அனைத்தையும் நிறைவேற்றுகின்ற முயற்சியை இந்து சமய அறநிலைத்துறை மேற்கொள்ளும். இன்றைய சுற்றுப் பயணத்தில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் திரு. குமரகுருபரன் அவர்களுக்கும்,மாவட்ட ஆட்சித் தலைவர்கள்,   காவல்துறையினர், இணை ஆணையர் திரு ஜெயராமன் மற்றும் சார்ந்த அலுவலர்களுக்கும்   இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி : தமிழ்நாட்டில் கடத்தப்பட்ட சிலைகள் மீட்பது குறித்து

பதில் : இந்து சமய அறநிலைத்துறை பொறுத்த அளவில் சிலைகள் மீட்பதற்கென்று ஐடியல் விங் என்ற ஒரு துறை இருக்கின்றது.  கடத்தப்படவிருந்த சிலைகளையும் மீட்டிருக்கின்றோம், அதேபோல் வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்ற சிலைகளையும் மீட்டு டெல்லியில் நடந்த ஒரு விழாவிலே 13 சிலைகளை பெற்று இருக்கின்றோம். அதோடு மட்டுமல்லாமல் கடத்தப்பட்டு வெளிநாட்டிலே இருக்கின்ற பல்வேறு சிலைகள் அடையாளம் காணப்பட்டு அதை மீட்டு வருகின்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் இருந்த தொய்வு நிலையை சுத்தமாக மாற்றி பல்வேறு வகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கையில் இருக்கின்ற காவல்துறை அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை சிலைகள் சம்பந்தப்பட்ட  ஐடியல் விங் முழுமையாக செயல்பட்டு சிலைகள் மீட்டல், சிலை கடத்தலை தடுத்து நிறுத்துவது போன்ற பல்வேறு பணிகளை  அனைவரும் மகிழ்ச்சி கொள்ளும் அளவிற்கு செய்து வருகிறது.

கேள்வி : இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் அவர்கள் திருக்கோவில் நகையெல்லாம் உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி  முறைகேடு நடப்பதாக தெரிவித்துள்ளது பற்றி

பதில் : தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவது போல நடிப்பவர்கள் எழுப்ப முடியாது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின் திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக நானும், துறையின் செயலாளர் திரு சந்திரமோகன் அவர்களும், ஆணையர் திரு.குமரகுருபரன் அவர்களும் திருச்சி மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டோம். சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு சில பொருட்கள் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்தை பற்றி கேட்டபோது அது தெய்வத்திற்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கையான  பலமாற்று பொன் இனம் என்று சொன்னார்கள்.

தெய்வத்திற்கு பயன்படுகின்ற நகைகளை நாங்கள் முறையாக பதிவிட்டு பதிவேட்டில் வரவு வைத்துக் கொண்டு பாதுகாப்பு அறையில் வைத்திருக்கின்றோம். தெய்வத்திற்கு முழுவதும் பயன்படாத பலமாற்று பொன்னினங்களை மூட்டையாக கட்டி வைத்திருக்கிறோம் என்று சொன்னார்கள் இதை உருக்குதற்கு ஏதேனும் ஆணை இல்லையா, மாற்றுவழி இல்லையா என்று துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டேன். 1977 ஆம் ஆண்டு இதற்காக ஒரு அரசாணை வெளியிடப்பட்டிருக்கின்றது. பல்வேறு திருக்கோயிலில் இதுபோன்று வந்திருக்கின்ற நகைகளை உருக்கி அதனை வங்கியில் டெபாசிட் செய்து அதன் வட்டித் தொகையை அந்தந்த திருக்கோயில்களுக்கு செலவிட்டு வருகிறோம், அந்த திருக்கோயிலின் திருப்பணிக்கு ஏதாவது தங்கம் தேவைப்பட்டால் வங்கியில் வைப்பு நிதியாக வைத்திருக்கின்ற தங்கத்தை திரும்ப பெற்று பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என அறநிலையத்துறை உயர் அலுவலர்கள் தெரிவித்தார்கள்.

இது ஒரு அருமையான திட்டம் இந்த திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் முழுமையாக செயல்படாமல் இருந்தது. அதனால் தமிழகத்தை மூன்று  மண்டலங்களாக பிரித்து மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமித்து அவர்களின் நேரடி பார்வையில் தங்கத்தை பிரிக்கின்ற பணியினை மேற்கொண்டிருந்தோம். இடையில் சிலர் நீதிமன்றத்திற்கு சென்றார்கள் நீதிமன்றமும் இந்த தங்கத்தை பிரிக்கின்ற பணிக்கு தடை ஏதும் விதிக்கவில்லை. பரம்பரை அறங்காவலர்கள் இருக்கின்ற திருக்கோயில்களில் தங்கத்தை பிரித்தெடுக்கின்ற பணியை மேற்கொள்ளலாம், பரம்பரை அறங்காவலர்கள் இல்லாத திருக்கோயில்களில் அறங்காவலர்களை நியமித்து பின்னர் பணியினை மேற்கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அந்த வகையில் இருக்கன்குடியில் 27 கிலோ தங்கத்தை உருக்கி அதனை வங்கியிலே டெபாசிட் செய்ததில் வட்டியாக மாதத்திற்கு 2 லட்சம் என்ற விதத்தில் ஆண்டிற்கு 24 லட்சம் ரூபாய் அந்த திருக்கோவிலுக்கு வருமானமாக வந்து கொண்டிருக்கிறது. அதேபோல தேவி பவானி அம்மன் திருக்கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற சுமார் 130 கிலோ எடை கொண்ட பலமாற்று பொன் இனங்களை மும்பையில இருக்கின்ற ஒன்றிய அரசுக்கு சொந்தமான ஆலையிலே உருக்கி 101 கிலோ தங்கத்தை நம்மிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள். அந்த தங்கமும் வைப்பு நிதிக்கு சென்றால் ஆண்டிற்கு சுமார் ஒரு கோடி 2 லட்சம் ரூபாய் வருமானம் அத்திருக்கோயிலின் திருப்பணிக்கு கிடைக்கும்.

இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் எந்தவித பயன்பாட்டிலும் இல்லாத தங்கத்தை ஒன்றிய அரசின் உருக்காலையில் உருக்குவதற்கு முன்னால் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கின்ற குழுவினரால் முழுவதுமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்டு, யாராவது பக்தர்கள் விரும்பினால் அவர்களின் முன்னிலையிலேயே அந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இது ஒட்டுமொத்தமாக திருக்கோயில் வளர்ச்சிக்கு உதவுகின்ற ஒரு நல்ல பணி. உண்மையிலேயே ஆன்மீக உலகத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செய்யப்படுகின்ற இந்த பணி  ஆன்மீகவாதிகளால் பாராட்டப்படுகின்றது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி : கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு புதிய வாடகை நிர்ணயம் செய்வது சம்பந்தமாக

பதில் : அதற்கான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது அதனை ஒழுங்குபடுத்தும் விதமாக நியாய வாடகைக் குழு  (Fair Rent Committee) ஒன்றை  அமைத்திருக்கின்றோம்.  அதில் நமது தலைமைச் செயலாளர் அவர்கள் இடம் பெற்றிருக்கின்றார். மேலும் ஓய்வு பெற்ற 2 கூடுதல் ஆணையர்கள் 2 இணை ஆணையர்களும் இடம் பெற்றிருக்கின்றார்கள்.  தமிழ்நாட்டில்  ஒரு சில இடங்களில் வாடகை குறைவாக இருக்கின்றது, ஒரு சில இடங்களில் வாடகை மிக அதிகமாக இருக்கின்றது.

இவற்றை ஒழுங்குபடுத்தும் வகையில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையைப் பெற்று, நியாய வாடகைக் குழு என்ன வாடகையை நிர்ணயிக்கிறதோ அது வசூலிக்கப்படும். அந்த வாடகை குடியிருப்பவர்கள் பயன்பெறும் வகையில் இருக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ,ப.,  சட்டமன்ற உறுப்பினர் திரு. பூண்டி  கலைவாணன்,   இணை ஆணையர் (திருப்பணி) திரு.பொன். ஜெயராமன்,  மண்டல இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

Tags : fair rent committee ,Minister Sekarbabu , The rent fixed by the Fair Rent Committee will be collected from tenants living in temple lands: Minister Shekharbabu informs
× RELATED ராயபுரம் பகுதிகளில் 3,400...