வால்பாறை: வால்பாறை அடுத்து உள்ள முடீஸ் எஸ்டேட் பஜார் பகுதியில் 2 வயது ஆண் புலி உடல் மெலிந்து, முள்ளம்பன்றி வேட்டையின் போது காயங்களுடன் கடந்த 8 மாதங்களுக்கு முன் வனத்துறை வீசிய வலையில் பிடிபட்டது.அதன்பின் வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனையின் படி மானாம்பள்ளி முகாமில் கூண்டில் சிறிய வைத்து மருத்துவ சிகிச்சை அளித்து, உணவளித்து பாதுகாக்கப்பட்டு வந்தது.
புலியை காட்டில் விடுவிக்க வேட்டை பயிற்சி அளிக்க வேண்டும் என வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதையடுத்து, ரூ.75 லட்சம் செலவில் அடர் வனப்பகுதியில் பிரம்மாண்ட கூண்டு அமைக்கப்பட்டு கடந்த ஜூன் 5ம் தேதி கூண்டில் விடப்பட்டது. இந்த நிலையில் நேற்று உலக புலிகள் தினத்தையொட்டி கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் காயமடைந்த அந்த புலிக்கு 3 முயல்களை வழங்கி வேட்டையாட பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது முயல்கள் நாலாபுரமும் தெரித்து ஓடிய நிலையில் புலி துரத்தி பிடித்து வேட்டையாடியது. ஆங்கிலப் படமான ‘தி லயன் கிங்’ பாணியில் வேட்டையாட தெரியாத புலியாக வளந்த புலி தற்போது 3 முயலை ஒரே நாளில் வேட்டையாடி உள்ளது.
24 மணி நேரமும் புலி மனிதர்களை நேரடியாக கண்ணில் பார்க்காதபடி கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. உணவு அளிப்பவர்கள் முகமூடி அணிந்து உணவு அளிக்கின்றனர்.எனவே வனத்துறையின் முயற்சியில் முயல் வேட்டையை புலி வெற்றிகரமாக முடித்து உள்ள நிலையில், அடுத்த பயிற்சிக்கு பன்றியைவிட வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். உலக புலிகள் தினத்தையொட்டி புலி முன்னேற்றம் அடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.