ஆம்ஸ்டரடாம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த காவல் உதவிஆய்வாளர் சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். நெதர்லாந்தில் காவலர்களுக்கான சர்வதேச தடகள போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி 5 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டத்தில் பங்கேற்று வெற்றிப்பெற்றுள்ளார். முதலில் இலக்கை அடைந்து தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள கிருஷ்ணமூர்த்தியை காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். இவர் ஏற்கனவே மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். நெதர்லாந்து சென்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 12 பேர் கொண்ட காவலர் குழுவினர் வருகின்ற 12ம் தேதி சென்னை திரும்புகின்றனர்.
காமன் வெல்த் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா அணி 5க்கு 0 என்ற கோல் கணக்கில் கானா அணியை அதிரடியாக வீழ்த்தியது. இங்கிலாந்தின் பார்மிங்காம் நகரில் நடந்த இப்போட்டியில் தொடக்க முதலே பந்தை தனது கட்டுப்பாடில் வைத்திருந்த இந்திய வீராங்கனைகள் அதிரடி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். போட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை குர்ஜித்கவுர் முதல் கோல் அடித்தார். அதனை தொடர்ந்து 30, 36, 39வது நிமிடங்களில் அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து இந்திய வீராங்கனைகள் அணிக்கு வலுவான முன்னிலை பெற்றுத்தந்தனர். இறுதிவரை போராடிய கானா வீராங்கனையால் கோல் எதுவும் போடமுடியவில்லை. ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை சலீமா மேலும் ஒரு கோல் அடிக்க இந்தியா 5க்கு 0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.