×

2 சிறை கைதிகளிடம் செல்போன் பறிமுதல்

பூந்தமல்லி: பூந்தமல்லி சிறையில் 2 கைதிகளிடம் இருந்து  செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். பூந்தமல்லி கிளை சிறையில் உள்ள கைதிகளின் அறைகளில் சிறை கண்காணிப்பாளர் முத்துராமன் நேற்று  அதிரடி சோதனை நடத்தினார். அப்போது, 2 கைதிகளின் அறை கழிவறைக்குள் செல்போன், சார்ஜர், சிம் கார்டு, பேட்டரி ஆகியவை இருப்பது தெரியவந்தது.

மேலும், அந்த கழிவறையில் இருவருடன் சேர்ந்த சில கைதிகளும் செல்போன்களை பயன்படுத்தி வெளியில் இருப்பவர்களுடன் பேசி வந்திருப்பதும் தெரியவந்தது. தகவலறிந்து வந்த பூந்தமல்லி போலீசார், 2 கைதிகளிடம் இருந்து செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள், பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையை  சேர்ந்த பாஸ்கர், எண்ணூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பதும், இவர்கள், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்  பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டதும் தெரிந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறை கைதிகளுக்கு எப்படி செல்போன் கிடைத்தது, அவர்கள் சிறைக்குள் இருந்தபடி செல்போன் மூலம் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்களா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். பூந்தமல்லி கிளை சிறையில் இம்மாதம் 2வது முறையாக கைதிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Prisoner, cell phone seized
× RELATED கோவில்பட்டியில் இன்று அதிகாலை...