ஆலந்தூர்: பரங்கிமலையில் உள்ள பயிற்சி அகாடமியில், இளம் ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழாவையொட்டி, சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில், ராணுவத்தில் புதிதாக பணியில் சேரும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த அகாடமியில் இளம் ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழா மற்றும் அணிவகுப்பு மரியாதை செலுத்தும் விழா நடைபெறுகிறது. இதையொட்டி, ராணுவ வீரர்களின் திறமைகளை வெளிபடுத்தும் வகையில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிகளை பயிற்சி மைய தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் சஞ்ஜீவ் சவ்கான் பார்வையிட்டார். இதில் ராணுவ வீரர்கள் குதிரைகளில் அமர்ந்தபடி உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், நெருப்பு மற்றும் தடுப்புகளை லாவகமாக தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு சாகசங்கள் செய்து காட்டினர். பின்னர் கேரள பாரம்பரிய வீர விளையாட்டான களறி, சுருள், வாள், ஈட்டி போன்ற ஆயுதங்களுடன் பயிற்சி அதிகாரிகள் சண்டையிட்டது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அதற்கேற்றபடி செண்டை மேளவாத்தியம் அதிரவைத்தது.
இதேபோல், ஜிம்னாஸ்டிக் சாகசத்தின்போது வீரர்கள் தாவி குதித்தல், கரணம் போடுதல், நெருப்பு வளையத்துக்குள் புகுதல் போன்றவற்றை பயிற்சி வீரர்கள் நேர்த்தியாக செய்து அசத்தினர். மேலும், பேண்டு வாத்திய குழுவினரின் இசைக்கேற்ப வீரர்கள் வளைந்து, நெளிந்து நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத் தொடர்ந்து, சிறப்பான சாகசங்கள் புரிந்த அணி தலைவர்களுக்கு லெப்டினென்ட் ஜெனரல் சஞ்ஜீவ் சவுகான் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.