ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதம் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து ஊட்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். 3 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், போலீசார் இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரித்து வருகின்றனர். 267 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் சயான், வாளையார் மனோஜ் உட்பட 4 பேர் நேரில் ஆஜராகினர். அப்போது, வெளிமாநிலங்களில் சிலரிடம் விசாரிக்க காலஅவகாசம் வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி தர், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.