சென்னை; பெங்களூரு விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னை சைதாப்பேட்டை சேர்ந்த மகா காந்தி என்னும் துணை நடிகர் மருத்துவ பரிசோதைனைக்காக மைசூர் செல்வதற்கு கடந்த நவம்பர் மாதம் பெங்களூரு விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அங்கு எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்த போது அவரை பாராட்டி, கைக்குலுக்கிய போது ஏற்க மறுத்து பொது வழியில் தன்னை இழிவு படுத்தி தாக்கியதாகவும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தாக்கல் செய்திருந்தார்.
ஒன்று அவருக்கு எதிராக அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மற்றோன்று தன்னை தாக்கியதாகவும் 2 வழக்குகளை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கினை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராக வேண்டும் என விஜய் சேதுபதிக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் 2 வழக்குகளையும் ரத்து செய்ய கோரியும் தனக்கு எதிரான சம்மனையும் ரத்து செய்ய கோரியும் விஜய் சேதுபதி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணைக்கு இடைகால தடை விதித்திருந்த நிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதி சசிக்குமார் விஜய் சேதுபதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் கேட்டுள்ளார்.
இதற்கு விஜய் சேதுபதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறிய போது பெங்களூரு எல்லையில் நடந்த சம்பவம் தொடர்பாக இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தாக்குதல் வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அதன் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடியுள்ளார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி முதலில் தாக்குதல் வழக்கை மட்டும் ரத்து செய்யக்கோரி உத்தரவிட்டதுடன் அவதூறு வழக்கை பொறுத்த வரையிலும் வழக்கின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வெண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.