×

சிபிஐ விசாரணைக்கு தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கை ஐகோர்ட் எப்படி விசாரிக்க முடியும்?: பொன் மாணிக்கவேலுக்கு நீதிபதிகள் கேள்வி..!!

சென்னை: சிபிஐ விசாரணைக்கு தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் எப்படி விசாரிக்க முடியும்? என பொன் மாணிக்கவேலுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சிலைக் கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், தமிழக அரசுக்கு எதிராக 2019ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போதைய தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி-யாக இருந்த டி.கே.ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் ஆகியோருக்கு எதிராக அவமதிப்பு வழக்குக்கான மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் பொன் மாணிக்கவேலுக்கு எதிராக கூறப்பட்ட குற்றசாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சமீபத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை தொடர்ந்து சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் வெவ்வேறு அமர்வுகளில் விசாரித்து, வெவ்வேறு உத்தரவுகள் பிறப்பித்ததால் குழப்பங்கள் ஏற்படுவதாகவும், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசலு அடங்கிய சிறப்பு அமர்வில் பட்டியலிட உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் பொன் மாணிக்கவேல் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலை கடத்தல் தொடர்புடைய அனைத்து வழக்குகளும் சிறப்பு அமர்வு தான் விசாரிக்க வேண்டும் என்ற நிலையில், தனி நீதிபதி இது தொடர்பான வழக்கை விசாரித்து உத்தரவிட்டது தவறு என்று வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சிபிஐ விசாரணை உத்தரவை எதிர்த்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை எப்படி விசாரிக்க முடியும்? என கேள்வி எழுப்பினர். யார் எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவெடுப்பார் என தெரிவித்து பொன் மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட வழக்கை எதிர்த்து தொடரப்பட்ட கூடுதல் மனுக்களை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags : iCourt ,CPI ,Bon Manikevel , CBI investigation, separate judge, ICourt, Pon Manikavel
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு