மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்வதற்காக 186 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செஸ் வீரர், வீராங்கனைகள் வந்துள்ளனர். பார்படாஸ், போட்ஸ்வானா, அண்டோரா, ஈராக், பஹ்ரைன், பியூர்டோ ரெகோ, கானா, கேமரூன், டொமினிகா ஆகிய நாடுகளை சேர்ந்த 110க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் சென்னை புறநகர் பகுதியான நாவலூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் தீவில் வசிக்கும் தமிழ் குடும்பத்தை சேர்ந்த 13 வயது சிறுமியும் அந்த நாட்டு சார்பில் விளையாட வந்துள்ளார் என்பது ஆச்சர்யம் மிக்க தகவலாகும். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வடக்கன்குளம் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் வில்சன் கடந்த 2000ம் ஆண்டு பார்படாஸ் தீவுக்கு சென்றார். அங்கு ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு ஜெனிட்டா வில்சன், ஹன்னா வில்சன் என்ற மகளும், டேனியல் வில்சன் என்ற மகனும் உள்ளனர்.
இவர்களில் ஹன்னா வில்சன் சிறு வயது முதலே செஸ் ஆர்வத்துடன் விளையாடியதால், பார்படாஸ் தீவில் உள்ள செஸ் அகாடமியில் முறையாக பயிற்சி பெற்று தற்போது இளம் பெண்கள் பிரிவில் பார்படாஸ் நாட்டின் நம்பர் ஒன் வீராங்கனையாக புகழ்பெற்று விளங்குகிறார். செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துகொள்ள குடும்பத்துடன் வந்துள்ள 13 வயதான தமிழ்நாட்டு சிறுமி வேறு நாட்டுக்காக விளையாடுவதை பல நாட்டவரும் ஆச்சர்யத்துடன் பார்த்து பாராட்டினர்.