உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் பாகேஸ்வரில் உள்ள அரசுப்பள்ளி மாணவிகள் சத்தமாக அலறி அழுவதும், தலையை குனிந்துகொண்டு முறைப்பதும் என வித்யாசமாக நடந்துகொள்வது பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகேஸ்வரில் உள்ள அரசுப்பள்ளியை சேர்ந்த ஒரு சில மாணவிகள் முதலில் வித்யாசமாக நடந்துகொண்ட நிலையில், மாணவிகளின் நடவடிக்கை குறித்து பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு பூசாரியை அழைத்து வந்து பூஜைகள் செய்த போது நிலைமை கட்டுக்குள் வந்ததாக பள்ளி தலைமை ஆசிரியை கூறியுள்ளார்.
ஆனால் தற்போது அதிக அளவிலான மாணவிகள் அவ்வாறு நடந்துகொள்ளவே கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளியில் சோதனை நடத்த கல்வித்துறை அதிகாரிகள் வந்தனர். அப்போது மாணவிகள் சத்தமாக அலறி அழுவதும், கூச்சலிடுவதும், தலையை குனிந்து உட்கார்ந்துகொள்வதும் என இருந்துள்ளனர். இதன் வீடியோ இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் பூஜை, ஹோமம் செய்தால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என குழந்தைகளின் பெற்றோர் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கு அதிகாரிகள் சம்மதிக்கவில்லை. மருத்துவரை வரவழைத்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவிகளின் செயல் மாஸ் ஹிஸ்டீரியாவை போல இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் விநோதமாக நடந்துகொள்வார்கள் என்றும் அவ்வாறு ஒருவர் நடந்துகொள்ளும் போது அது அவர்களை சுற்றி இருப்பவர்களை பாதிக்கும் என்றும் இது உளவியல் அழுத்தத்தால் தூண்டப்படும் பிரச்சனை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.