×

உடுமலை அருகே கரடு முரடான மலைப்பாதையில் ஆபத்தான பயணம் கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கிச்சென்ற இளைஞர்கள்

உடுமலை : உடுமலை அருகே குழிப்பட்டி மலைவாழ் கிராம மக்கள், அவசர மருத்துவ தேவைக்காக நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கி வரும் அவல நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
திருப்பூர் வனக்கோட்டத்தில், உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வன சரகங்கள் உள்ளன. உடுமலை வன சரகத்தில், குழிப்பட்டி, குருமலை, மேல்குருமலை, மாவடப்பு, பூச்சிக்கொட்டாம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மலைவாழ் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் சாலை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி கடும் அவதிப்படுகின்றனர்.

மலைக்கிராமங்களில் யாருக்காவது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களை நகரங்களுக்கு கூட்டி வர சாலைவசதி இல்லை. இதனால், மலை பகுதியிலிருந்து, சமவெளி பகுதியை எளிதில் அடையும் வகையில், வனப்பகுதியில் வழித்தடம் அமைத்து தர வேண்டும் என, மலைவாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து போராடி வருகின்றனர்.
அவசர மருத்துவ தேவைக்கு கூட, அப்பர் ஆழியாறு, காடம்பாறை வழியாக, 55 கி.மீ., தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது. இதனால், உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, கர்ப்பிணிகள், நோயாளிகளை தொட்டில் கட்டி, பல மணி நேரம் கரடு முரடான பாதையில், சுமந்து வருகின்றனர்.

திருமூர்த்திமலை காண்டூர் கால்வாய் அருகே, பொன்னாலம்மன் கோவில் வரை தொட்டிலில் தூக்கி வந்து, உடுமலை, எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது உடுமலை அரசு மருத்துவமனைக்கு வர வேண்டியதுள்ளது. குழிப்பட்டி மலைவாழ் கிராம பகுதியை சேர்ந்த 4 மாத கர்ப்பிணி சரண்யாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த ஆண்கள், பெண்கள், அப்பெண்ணை தொட்டில் கட்டி நகரப்பகுதிக்கு தூக்கி வந்தனர்.

இது குறித்து குழிப்பட்டி மலைவாழ் கிராம மக்கள் கூறியதாவது: திருமூர்த்திமலை பொன்னாலம்மன் சோலையிலிருந்து, குழிப்பட்டி வரை, 7 கி.மீ தூரத்தில், பாரம்பரிய வழித்தடம் உள்ளது. மலை மேல் உள்ள 10க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்களுக்கு, இந்த பாதை பயன்பாட்டில் இருந்தது. ஆனால், தற்போது பயன்படுத்த முடியாத நிலையிலும், வனத்துறையினர் கட்டுப்பாடு காரணமாகவும், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தை மேம்படுத்தி, வன உரிமை சட்டப்படி மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு, எளிதான, நிரந்தர பாதை அமைத்து தர வேண்டும். இதுகுறித்து அரசும், வனத்துறையினரும் மலைவாழ் மக்கள் குடியிருப்புக்கு செல்ல திருமூர்த்திமலை, பொன்னாலம்மன் சோலை முதல், குழிப்பட்டி வரை வழித்தடம் அமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

நவீன வசதிகளும், விஞ்ஞானமும் வளர்ச்சி அடைந்த இக்கால சூழலிலும் சாலை வசதியின்றி, மலைகிராம மக்கள் நோயாளிகளை ஆபத்தான மலைப்பாதையில் தொட்டில் கட்டி மேற்கொள்ளும் அபாயகரமான பயணத்திற்கு அரசும், அதிகாரிகளும் விரைந்து தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Udumalai , Udumalai: Villagers of Kulitpatti Hills near Udumalai carry patients on cradles for urgent medical needs.
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...