கலசப்பாக்கம் : பராமரிப்பின்றி கலசப்பாக்கம் பயணியர் நிழல் கூடத்தில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர் திருவண்ணாமலை-வேலூர் செல்லும் சாலையில் மையப் பகுதியில் கலசப்பாக்கம் தொகுதியின் தலைமையிடமான கலசப்பாக்கத்தில் பொதுமக்களின் நலன் கருதி பயணிகள் நிழல் குடை கட்டித் தரப்பட்டது. இதன்மூலம் பொதுமக்கள் பயனடைந்து வந்தனர்.
தற்போது பராமரிப்பு இல்லாததால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் நிழல் கூடத்தில் அமர முடியவில்லை. இருக்கைகள் முற்றிலுமாக சேதம் அடைந்ததால் நிழல் குடை பழுதுபார்க்கும் பணி தொடங்கியது. தற்போது இந்த பணி முழுமையாக முடியவில்லை. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் தினந்தோறும் தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆகியோரை பணியில் ஈடுபடுத்தி தூய்மை செய்யலாம்.
ஆனால் அலட்சியமாக தூய்மை செய்யாமல் இருப்பதால் துர்நாற்றத்தைக் கண்டு பொதுமக்கள் முகம் சுளிக்க வேண்டியுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்களின் நலன் கருதி கட்டப்பட்டுள்ள நிழல் குடை முழுமையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் பழுது பார்க்கும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.