சென்னை: மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்காக நடத்தப்பட்ட தேர்வில் தற்காலிகமாக தேர்வானவர்கள் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட அறிவிப்பு: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழ்நாடு சீர்திருத்த பள்ளிகள் மற்றும் ஒழுக்க கண்காணிப்பு பணிகளில் (சமூக பாதுகாப்பு பணி) அடங்கிய மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவியில் காலியாக உள்ள 16 பணியிடங்களுக்கு கடந்த மாதம் 19ம் தேதி கணினி வழியில் தேர்வு நடந்தது.
இத்தேர்வில் 2187 பேர் கலந்து கொண்டனர். தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 61 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.