×

இந்தியாவின் செஸ் தலைநகரம் சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்துவதன் மூலம் தமிழ்நாட்டின் விளையாட்டு துறை, சுற்றுலா துறை, தொழில் துறையும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய இருக்கிறது. இந்தியாவின் செஸ் தலைநகரம் என்று சொல்லத்தக்க வகையில் சென்னை இருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த 44வது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சர்வதேச சதுரங்க போட்டியால் நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு, பன்னாட்டு அங்கீகாரம் கிடைக்கும் வகையில், இந்த அரங்கில் தொடக்கவிழாவானது மிக எழுச்சியோடு, ஏற்றத்தோடு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த விழாவிற்கான அழைப்பிதழுடன் டெல்லி சென்று நம்முடைய பிரதமரை சந்தித்து நேரில் அழைக்கலாம் என்று நான் திட்டமிட்டு இருந்தேன். ஆனால் இடையில் எனக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக நேரில் செல்ல இயலாத ஒரு சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்னை நலம் விசாரிப்பதற்காக பிரதமர் தொடர்பு கொண்டார்கள். என்னை நலம் விசாரித்த அவரிடத்தில், எனது நிலையை நான் விளக்கினேன். அவர் பெருந்தன்மையோடு சொன்னார் ‘நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் - நான் நிச்சயம் கலந்து கொள்வேன் - இந்த விழாவானது இந்தியாவுக்கே பெருமை தரக்கூடிய விழா’ என்று பிரதமர் குறிப்பிட்டார். 44-வது பன்னாட்டு ஒலிம்பியாட் போட்டி என்பது ரஷ்ய நாட்டில்தான் நடப்பதாக    முதலில் சொல்லப்பட்டது. சில பிரச்னைகளால் ரஷ்யாவில் நடத்த முடியாத சூழ்நிலை. வேறு எந்த நாட்டில் நடைபெறலாம் என்பதற்கான ஆலோசனைகள் நடந்ததை அறிந்து, இந்தியாவில் நடக்கும் வாய்ப்பு வருமானால், தமிழ்நாட்டில் நடத்தும் வாய்ப்பை நாம் பெற வேண்டும் என்று அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டேன்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இது பற்றி நமக்கு தகவல்கள் கிடைத்தன. கடந்த மார்ச் 16-ம் நாள் இதற்கான முறையான அறிவிப்பை நான் வெளியிட்டேன். இந்த விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக 18 துணைக் குழுக்களை தமிழ்நாடு அரசு உருவாக்கியது. இது போன்ற பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு குறைந்தது 18 மாதங்களாகும் என்பார்கள். ஆனால் நான் பெருமையோடு சொல்கிறேன், நான்கே மாதங்களில் பன்னாட்டுப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செய்திருக்கிறது. இதற்குக் காரணமான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதனையும், விளையாட்டுத்துறையைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளையும், இதற்கு துணைநின்ற அனைத்துத் துறை அதிகாரிகளையும் நான் மனதார வாழ்த்துகிறேன், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

44-வது பன்னாட்டு சதுரங்க ஒலிம்பியாட் போட்டி என்பது உலக அளவில் தமிழ்நாட்டின் மீது கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இன்று துவங்கியுள்ளது.  இப்போட்டியின் மூலமாக தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறை மட்டுமல்ல - சுற்றுலாத் துறையும் - தொழில் துறையும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய இருக்கிறது. இன்னும் சொன்னால், தமிழ்நாட்டினுடைய மதிப்பும், தமிழ்நாடு அரசினுடைய மதிப்பும் பெருமளவு இன்று முதல் மேலும் மேலும் உயர்கிறது. இந்த உயர்வு என்பது மிகச் சாதாரணமாகக் கிடைத்து விடுவது அல்ல. சரியான திட்டமிடல், கடின உழைப்பு, அதனுடைய விளைவே இந்த உயர்வு. இந்தியத் துணைக் கண்டத்தில் முதல் முறையாகவும், ஆசியா கண்டத்தில் மூன்றாவது முறையாகவும் இந்த செஸ் போட்டிகள் நடக்க இருக்கின்றன. கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே இந்தியத் துணைக்கண்டத்தில் விளையாடப்பட்டு வந்த சதுரங்க விளையாட்டுதான், இன்று உலகம் முழுக்கவும் செஸ் என்ற பெயரால் பரவி இருக்கிறது. சில சில மாறுதல்களுடன் உலகின் பல்வேறு நாடுகளில் சதுரங்கம் விளையாடப்பட்டு வருகிறது.

தொடக்கவிழா இங்கு நடைபெற்றாலும், போட்டிகள் முழுமையாக, இயற்கை எழில் கொஞ்சும் மாமல்லபுரத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு அரசு செய்திருக்கிறது. சென்னைப் பட்டனத்தை மெட்ராஸ் என்று அழைத்ததைப் போல சதுரங்கப்பட்டனத்தை சத்ராஸ் என்று அழைத்தார்கள். அத்தகைய சதுரங்கப்பட்டனத்துக்கு அருகில்தான் உலகப்புகழ் பெற்ற சதுரங்கப் போட்டி நடக்க இருக்கிறது. 1961-ம் ஆண்டு உலக செஸ் சாம்பியனாகப் புகழ் பெற்ற மானுவல் ஆரோன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது நமக்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பெருமை. இந்தியாவில் செஸ் விளையாட்டை முன்னோக்கி நகர்த்தி, பல்வேறு திறமையாளர்களுக்கு ஊக்கமளித்ததும் மானுவல் ஆரோன்தான். 1972-ம் ஆண்டே சென்னையில் இருந்த சோவியத் கலாச்சார மையத்தில் செஸ் க்ளப் ஒன்றினை உருவாக்கியவர் ஆரோன்.

செஸ் விளையாட்டில் உலகப்புகழ் பெற்ற வீரர்களை உருவாக்கிய சோவியத் நாடே, ஆரோனின் ஆலோசனையை பெற்றுத்தான் செயல்பட்டது. தமிழ்நாடு செஸ் அசோசியேஷனை உருவாக்கியவரும் இவர்தான். உலகக் கிராண்ட் மாஸ்டராகப் புகழ் பெற்ற விஸ்வநாதன் ஆனந்த் பற்றி உங்களுக்கு நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. 1988-ம் ஆண்டு தனது 19வது வயதில் உலகப் புகழைப் பெற்றவர் ஆனந்த். இன்று வரை உலக சதுரங்க ஆட்டத்தில் வலிமையான வீரராக அவர் விளங்கிக் கொண்டு இருக்கிறார். 2001-ம் ஆண்டு பெண் கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்றவர் விஜயலட்சுமி சுப்பராமன். 2018-ஆம் ஆண்டு மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டராக உயர்ந்தார் பிரக்ஞானந்தா.

இந்தியாவில் உள்ள 73 கிராண்ட் மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அதாவது 36% இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இது புலனாய்வு மற்றும் வியூகத்தின் விளையாட்டு. மேலும் இந்த விளையாட்டில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்பதில் பெருமை கொள்கிறேன். செஸ் விளையாட்டில் சென்னையை இந்தியாவின் தலைநகரம் என்று சொல்லலாம். இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழக அரசு உடனடியாக 102 கோடி ரூபாய் ஒதுக்கியது. மேலும், இந்திய வீரர்களின் அனைத்து செலவுகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். பள்ளி மாணவர்களுக்கு செஸ் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு கோடி ரூபாய் நிதியை பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கீடு செய்திருக்கிறது.

வணக்கம் சொல்லி தமிழர் பாரம்பரிய உடையில் மாவீரராகவும் சின்னத்தை வடிவமைத்தோம். தம்பி என்று பெயர் வைத்தோம். தம்பி என்ற சொல் சகோதரத்துவத்தின் அடையாளம். நாம் அனைவரும் ஒரே சகோதரத்துவம் என்பதைக் குறிக்கும். தமிழ்நாட்டின் மாபெரும் மக்கள் தலைவர் அண்ணா அனைவரையும் தம்பி என்று அன்புடன் அழைத்தார். இந்த சின்னத்தின் பெயர் அத்தகைய அன்பான வார்த்தையின் நினைவாக உள்ளது. அதற்கான சிறப்புமிகுந்த விளம்பரப் பாடலை தமிழ்நாட்டில் பிறந்து, உலகளாவிய இசை உலகத்தின் புகழை தனது இளமைக் காலத்திலேயே பெற்ற என்னுடைய அருமைச் சகோதரர் ஏ.ஆர்.ரகுமான், இசை அமைத்துக் கொடுத்தார். இப்படி செஸ் ஒலிம்பியாட் என்பது விளையாட்டுப் போட்டியாக மட்டுமல்ல, விளையாட்டு விழாவாக மட்டுமல்ல - இந்தியாவில் நடைபெறும் உலகளாவிய பண்பாட்டுத் திருவிழாவைப் போல் ஒரு சகோதரத்துவ மனப்பான்மையுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இத்தகைய விழாவைத் தொடங்கி வைக்க வருகை தந்த பிரதமர் நரேந்திரமோடிக்கு நான் நன்றி சொல்கிறேன், என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இது போன்ற வாய்ப்புகளை தொடர்ந்து நீங்கள் தமிழகத்துக்குத் தாருங்கள் என்றும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். கீழடியில் ஏராளமான பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அங்கு இரண்டு வகையான ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளன. தந்தத்தினால் ஆன காய்கள் இவை. இவ்வகையான பொருட்கள், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை விளையாடப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இவை அனைத்தும் சுடுமண்ணால் சுடப்பட்டு பெரும்பாலும் கருப்பு நிறம் கொண்டவையாக உள்ளன.

‘ஆனைக்குப்பு’ என்று சதுரங்க விளையாட்டுக்கு தமிழ் இலக்கியத்தில் பெயர் இருந்துள்ளது. ‘ஆனைக்குப்பு ஆடுவோரைப் போலவே’ என்று நாலாயிர திவ்ய பிரபந்தம் சொல்கிறது. அந்தளவுக்குப் பல்லாயிரம் ஆண்டு தொடர்பு, சதுரங்க விளையாட்டுக்கும் தமிழ்நாட்டும் உண்டு. அறிவுக்கூர்மையும் வியூகமும் கொண்ட விளையாட்டு இது. அத்தகைய உலகளாவிய அறிவு விளையாட்டு இன்று (நேற்று) தொடங்குகிறது. ஒரு காலத்தில், அரசர்களின் விளையாட்டு என்று சொல்லப்பட்டது. இன்று அது மக்கள் அனைவரின் விளையாட்டாக மாறிவிட்டது. மூளை சார்ந்த போர்க்கலையாகச் சொல்லப்படும் விளையாட்டு இது. அதிர்ஷ்டத்தை நம்பிய விளையாட்டு அல்ல, அறிவை நம்பிய விளையாட்டு.இந்த விளையாட்டினை தமிழகத்தில், இந்தியாவில், மேலும் பரவச்செய்ய, இந்தப் போட்டிகள் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

இன்றைய மாணவ சமுதாயத்திற்கு கல்வியோடு விளையாட்டையும் கலந்து அளிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அறிவுத்திறனைப் பெருக்கும் சதுரங்கத்தின் பங்கும் இடம்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு இந்த ஒலிம்பியாட் ஒரு சிறப்பான துவக்கப்புள்ளியாக இருக்கும் என நம்புகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். வணக்கங்கள். உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு வீரர்களையும் தமிழகத்திற்கு வரவேற்கிறேன். வந்ததற்கு அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் விருந்தளிப்பது தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் ஒரு மரியாதை. எங்கள் பிரதமருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags : India ,Chennai ,Chief Minister of State ,K. Stalin , Chennai is India's chess capital: Chief Minister M.K.Stalin's pride
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்