திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தவறான உறவில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்து கொலை செய்த தாய் மற்றும் பாட்டியை போலீசார் கைது செய்தனர். வேடம்பூர் தோப்புத்தெருவை சேர்ந்த 33 வயதான ரேனுகா என்பவருக்கும், நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சார்ந்த முத்து என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த பல ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வசித்து வருகின்றனர். ரேனுகா தனது தாய் வீட்டில் தங்கி கூடுவாசலில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்த நிலையில் கமலேஷ் என்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில் கர்ப்பமான ரேனுகாவிற்கு கடந்த 22-ம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தையை தாய் ரேனுகாவும், பாட்டி ரேவதியும் தனது வீட்டில் பின்புறம் உயிருடன் புதைத்ததாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அங்கு சென்ற போலீசார் வட்டாட்சியர் முன்னிலையில் குழந்தையை தோண்டி எடுத்ததுடன் அதே இடத்தில் உடற்கூறு ஆய்வும் செய்யப்பட்டது. இது தொடர்பாக வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த தாய் ரேனுகா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பாட்டி ரேவதி ஆகியோரை கைது செய்தனர்.