×

திருவாரூர் அருகே பச்சிளம் குழந்தையை பாலத்தின் பக்கவாட்டு சுவரில் அடித்து கொலை செய்த தாய், பாட்டி கைது: விசாரணையில் திடுக் தகவல்..!!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே பச்சிளம் குழந்தையை பாலத்தின் பக்கவாட்டு சுவரில் அடித்து கொலை செய்த தாய் மற்றும் பாட்டியை போலீசார் கைது செய்தனர். உடலை தோண்டி எடுத்து போலீசார் ஆய்வு செய்த நிலையில், கொலை அம்பலமாகியுள்ளது. பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தாயே பாலத்தின் சுற்றுசுவரில் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்துக்கு உட்பட்ட வேடம்பூரை சேர்ந்தவர்கள் மாரியப்பன், ரேவதி தம்பதி. இவர்களுக்கு 33 வயதான ரேணுகா உட்பட 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

ரேணுகாவுக்கு கடந்த 22ம் தேதி திருவாரூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், மருத்துவமனையில் குழந்தை இறந்துவிட்டதாக கூறி வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிந்து அவர் வலங்கைமான் வட்டாட்சியர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு குழந்தை உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ரேணுகா வீட்டில் இல்லாத நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின்னர் குழந்தையின் சடலம் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் குழந்தை அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த போலீசார் சென்றபோது வீட்டில் குழந்தையின் தாய் மற்றும் பாட்டி தலைமறைவானது தெரியவந்தது. ரேணுகாவின் 11 வயது மகனிடம் கேட்டபோது குழந்தையை தாய் கொன்று புதைத்ததாக கூறியுள்ளார். இதையடுத்து குழந்தையின் தாய் மற்றும் பாட்டியை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று இரவு அவர்கள் இருவரையும் பிடித்தனர். குழந்தை கொலை குறித்து விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

ரேணுகாவுக்கு நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திட்டச்சேரியை சேர்ந்த முத்து என்பவருடன் 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 11 வயதில் இரட்டை ஆண் குழந்தையும், 8 வயதில் ஒரு பெண் குழந்தை உட்பட 3 குழந்தைகள் உள்ளனர். ரேணுகாவின் கணவர் முத்து கடந்த 7 வருடங்களுக்கு முன்பு மனைவி, குழந்தைகளை பிரிந்து சென்று திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் விவாகரத்து ஆகாத நிலையில், ரேணுகா தனது 3 குழந்தைகளுடன் வேடம்பூரில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

குழந்தைகளை வளர்க்க வருமானமின்றி தவித்த அவர், குடவாசலில் உள்ள ஜவுளி கடை ஒன்றுக்கு பணிக்கு சென்றுள்ளார். அங்கு ரேணுகாவுக்கு, உடன் வேலை பார்த்து வந்த கமலேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் கர்ப்பமடைந்த ரேணுகாவுக்கு கடந்த 22ம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 11 மற்றும் 8 வயதில் 3 குழந்தைகள் உள்ள நிலையில், திருமண பந்தத்தை மீறி பிறந்த குழந்தையை வீட்டிற்கு கொண்டு சென்றால் கிராமத்தினரின் வசவுகளுக்கு ஆளாக வேண்டும் என நினைத்துள்ளார்.

இதையடுத்து மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தையை கட்டை பையில் எடுத்துக்கொண்டு சென்ற அவர், வழியில் பாலத்தின் சுற்றுச்சுவரில் அடித்துள்ளார். இதில் குழந்தை மயக்கமாகியுள்ளது. குழந்தை இறந்துவிட்டதாக நினைத்து வீட்டிற்கு கொண்டு சென்று புதைக்க திட்டமிட்டுள்ளார். அப்போது குழந்தைக்கு உயிர் இருந்த நிலையில் அழுது இருக்கிறது. இதனால் அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்துவிடுமோ என பயந்த ரேணுகா, குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் வீட்டிற்கு பின்னால் குழந்தையை குழி தூண்டி புதைத்துள்ளார். குழந்தையை புதைக்க அவரது தாய் ரேவதியும் உடந்தையாக இருந்ததாக போலீசில் தெரிவித்துள்ளார். இதையடுத்து குழந்தையின் தாய், பாட்டியை போலீசார் கைது செய்தனர். 


Tags : Pacchilam ,Tiruvarur , Tiruvarur, Bachila child, murder, mother, grandmother, arrested
× RELATED பச்சிளம் ஆண் குழந்தை கொல்லப்பட்ட...