கும்பகோணம்: கும்பகோணத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென இடியுடன் மழை பெய்தது. இதில் கும்பகோணம் ராமசாமி கோயில் வடக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்தில் இடி தாக்கியது. இதனால் கோபுரத்தின் உச்சியில் மேற்கு பகுதியில் உள்ள மகா நாசி என அழைக்கப்படும் கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து கீழே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் பலத்த சத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து காவலாளி சத்தம் கேட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது கோயில் கோபுரத்தில் இருந்த சுதை சிற்பத்தின் ஒரு பகுதி இருந்து கீழே விழுந்திருப்பது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து சம்பவம் குறித்து கோயில் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் கோயிலுக்கு விரைந்து வந்த அறநிலையத்துறை அதிகாரிகள் கோபுரத்தின் இடிந்த பாகங்களை பார்வையிட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கோபுரத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.