×

டெல்லி போராட்டத்தின்போது கரூர் எம்.பி. ஜோதிமணி ஆடை கிழிக்கப்பட்ட சம்பவம் : ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கண்டனம்!!

டெல்லி : டெல்லி போராட்டத்தின்போது கரூர் எம்.பி. ஜோதிமணி ஆடை கிழிக்கப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்றும் 3வது நாளாக விசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி பேரணி செல்ல முயன்ற போது கரூர் எம்.பி. ஜோதிமணியை போலீசார் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். அப்போது போலீசார் ஜோதிமணியின் ஆடையை கிழித்து அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் பேசிய ஜோதிமணி, போலீசார் அத்துமீறி நடத்துக் கொண்டதாகவும் ஒவ்வொரு முறை போராட்டத்தின் போதும் டெல்லி போலீசாரின் இது போன்ற அத்துமீறல் தொடர்வதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார்.

இதுதொடர்பாக வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்ட ஜோதிமணி, ஒரு எம்.பி.யை இப்படித்தான் நடத்துவதா? என கேள்வி எழுப்பி உள்ளார். இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி, மக்களின் துயரங்களை நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்கும் மக்கள் பிரதிநிதிகள் குற்றவாளிகள் போல நடத்தப்படுகின்றனர். இதுதான் உண்மையில்  நாடாளுமன்றத்திற்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார். இதேப்போல காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் ஜோதிமணியின் வீடியோவை தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில் அவர், கேள்வி கேட்டதற்காக பெண் எம்.பி.க்களின் உடைகளை கிழிப்பதும், சாலையில் இழுத்து செல்வதும் உச்சக்கட்ட கொடூரம். ஜனநாயக நாட்டில் பிரச்சினைகளுக்கு நீங்கள் செவிமடுக்க வேண்டும். ஆனால் நீங்கள் ஏன் கேள்விகளுக்கு பயப்படுகிறீர்கள்? என பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Karur ,Delhi ,Jyotimani dress ,Rahul Gandhi ,Priyanka Gandhi , Delhi, Aghtar, Karur, MP, Jyotimani
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...