சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்கள் இலவச விமான பயணம் செய்தனர். 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு அரசு பள்ளி மாணவ-மாணவி மாணவிகளுக்கு இலவச விமான பயணத்தை தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது. பள்ளிகளில் செஸ் விளையாட்டு போட்டிகளை நடத்தி, வெற்றி பெற்று தேர்வு 149 மாணவர்கள் செய்யப்பட்டனர். தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு விமானத்தில் 149 மாணவர்கள், 5 ஆசிரியைகள் உள்பட மொத்த 154 பேர் நேற்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து சென்றனர். இந்த விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிவந்தது.
அதன் பின்பு மாலை 4.30 மணிக்கு இந்த விமானம் சென்னை பழைய விமான நிலையத்திற்கு வந்து தரையிறங்கியது. இந்நிலையில் முன்னதாக இந்த விமானம் நேற்று புறப்படும்போது, காலையில் சென்னை விமான நிலையத்திற்கு தமிழக அமைச்சர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் மாணவ மாணவிகளை சென்னை விமான நிலையத்தில் உற்சாகமாக வழியனுப்பினர். இந்த விமானத்தை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.