×

மாநகராட்சி உடற்பயிற்சி கூடத்தில் குடிபோதையில் பிளேடால் உடலை கிழித்து ரவுடி ரகளை: மயிலாப்பூரில் பரபரப்பு

சென்னை: மயிலாப்பூர் மாநகராட்சி உடற்பயிற்சி கூடத்தில் ரவுடி ஒருவர் குடிபோதையில் உள்ளே புகுந்து தனது உடலை பிளேடால் கிழித்து ரகளையில் ஈடுபட்டார். அதை தடுக்க முயன்ற நபர்களையும் தாக்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மயிலாப்பூர் பிடாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அப்துல்லா (35). ‘பி’ கேட்டகிரி ரவுடியான இவர் மீது கொலை முயற்சி மற்றும் அடிதடி என 7 வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. அப்துல்லா, தினமும் மயிலாப்பூர் பஜார் ரோட்டில் உள்ள மாநகராட்சி உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்வது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் மாலை குடிபோதையில் உடற்பயிற்சி கூடத்திற்கு வந்த அப்துல்லா, திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் உடற்பயிற்சி கூடத்தில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அடித்து உடைத்தார். உடற்பயிற்சி செய்த வாலிபர்களையும் அடித்து விரட்டினார். அதோடு இல்லாமல், தான் வைத்திருந்த பிளேடால் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தனது உடலில் கிழித்துக்கொண்டு வெறித்தனமாக கூச்சலிட்டார். அப்போது அவரை தடுக்க முயன்றவர்களையும் அடித்துவிட்டு வெளியே வந்த அவர், சாலையில் செல்லும் நபர்களையும் அடித்து உதைத்தார். இதனால் சிறிது நேரம் அங்கு பதற்றம் நிலவியது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த காயங்களுடன் தகராறில் ஈடுபட்ட ரவுடி அப்துல்லாவை கைது செய்ய முயன்றனர். அப்போது, தன் கையில் இருந்த பிளேடால் தன்னை அறுத்துக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார். என்னை பிடிக்க முயன்றால் உங்களையும் அறுத்திடுவேன் என போலீசாரை மிரட்டினார். இதனால் போலீசார் என்ன செய்வது என்று புரியாமல் சிறிது நேரம் திகைத்தனர். பின்னர் ஒரு வழியாக போலீசார் ரவுடி அப்துல்லாவிடம் சமரசம் பேசி அங்கிருந்து ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைதொடர்ந்து, பொதுமக்கள் அளித்த புகாரின்படி ரவுடி அப்துல்லாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கத்தி, பிளேடு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மயிலாப்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Riot ,Mylapore , Drunken mob rips body with blade at municipal gymnasium: Mylapore riots
× RELATED மயிலாப்பூர் பங்குனி திருவிழாவில்...