தாம்பரம்: 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடக்கிறது. உலகம் முழுவதும் உள்ள 188 நாடுகளில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் போட்டியில் கலந்துகொள்கின்றனர். இந்த போட்டிகள் தமிழகத்தில் நடப்பதை பெருமைப்படுத்தும் வகையில் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் நேற்று காலை செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கல்லூரி முதல்வர் வில்சன் தலைமையில் நடந்த பேரணியை செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ் தொடங்கி வைத்தார். ஐஏஎப் சாலையில் இருந்து வேளச்சேரி சாலை வரை நடந்த பேரணியில் செஸ் ஒலிம்பியாட்டை பெருமைப்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தியபடி மாணவ, மாணவிகள் முகத்தில் செஸ் சதுரங்க வடிவில் பெயின்டிங் செய்தும், செஸ் போர்டு வடிவமைப்பிலான கொடிகளுடன், கருப்பு வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிந்தபடி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.