×

பூந்தமல்லி ரவுடி கொலையில் பரபரப்பு தகவல்

சென்னை: பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் என்ற ஸ்டீபன்ராஜ் (26). நேற்று முன்தினம் இவரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்தனர்.இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடினர்.  

இந்நிலையில் கொலை தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வெள்ளவேடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் என்பவரை கொலை செய்த வழக்கில் ஸ்டீபன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். மேலும் வெள்ளவேடு காவல் நிலையத்தில் ஸ்டீபன் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது ஆதரவாளர்கள் கொலை வழக்கு தொடர்பாக தற்போது சிறையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் பெரிய ரவுடியாக காட்டிக் கொள்ள ஸ்டீபன் பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஸ்டீபன் கோஷ்டிக்கு எதிராக எபினேசர் கோஷ்டி செயல்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு எபினேசர் வீட்டுக்கு சென்ற ஸ்டீபன், தனக்கு எதிராக செயல்பட்டால் எபினேசரின் தலையை தனியாக வெட்டி எடுத்து விடுவேன் என்று எபினேசரின் பெற்றோரிடம் மிரட்டி விட்டு வந்துள்ளார். இதுகுறித்து எபினேசரிடம் அவரது பெற்றோர் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துள்ளனர். இதனால் ஸ்டீபன் தன்னை கொலை செய்து விடுவானோ என்ற அச்சத்தில் அவரை தீர்த்துக் கட்ட எபினேசர் முடிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து எபினேசர் தனது கூட்டாளிகளுடன் சென்று நோட்டமிட்டு நேற்று முன்தினம் புளியம்பேடு பகுதியில் வைத்து ஸ்டீபனை வெட்டிப் படுகொலை செய்திருப்பது  தெரியவந்துள்ளது. இந்த நிலையில் 2 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.


Tags : Poontamalli , Sensational information in Poontamalli rowdy murder
× RELATED பூந்தமல்லியில்...