சென்னை: சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஓட்டுநர் இன்றி 26 மெட்ரோ ரயில்களை இயக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 ன் கீழ், ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ இரயில்களை (மொத்தம் 78 பெட்டிகள்) உருவாக்கும் ஒப்பந்தம்-ARE-03A-ஐ ஏலதாரர் M/s அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூபாய் தொள்ளாயிரத்து 46 கோடியே 92 லட்சம் மதிப்பில் (வரிகள் உட்பட) வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கான நிதி தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், வடிவமைப்பு உற்பத்தி, சோதனை தரமான மெட்ரோ இரயில் இயக்குதலுக்கான தகுதி, பணியாளர்களுக்கு பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல் மற்றும் குறைபாடு பொறுப்பு உள்ளிட்ட ஓட்டுனர் இல்லாத மெட்ரோ இரயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும். இந்த ஒப்பந்ததின் கீழ் முதல் மெட்ரோ இரயில் 2024-ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
அதைத் தொடர்ந்து கடுமையான பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாத இரயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும் அதன்பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ இரயில்களும் முதல் மெட்ரோ இரயில் வழங்கப்பட்ட ஒரு வருடத்திற்குள் ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த ஒப்பந்தத்திற்கான மொத்த கால அளவு 40 மாதங்கள் ஆகும்.