×

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் கைதான 5 பேரை ஒரு நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி..!!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் கைதான 5 பேரை ஒரு நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற பிளஸ் 2 மாணவி, மர்மமான முறையில் கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். பள்ளி சார்பில் சரியான பதில் அளிக்காததால் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டி  சாலை மறியல், போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். வன்முறை நடந்த அன்றே மாணவியின் மரண வழக்கு தொடர்பாக பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர், இரு ஆசிரியைகள் என 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.  இதனிடையே, கைதான பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் 5 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி புஷ்பராணி முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, கைதானவர்களை 3 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இருப்பினும், தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கர் உள்ளிட்ட 5 பேருக்கு ஒருநாள் சிபிசிஐடி காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஆசிரியர்கள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோரையும் ஒரு நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. நாளை நண்பகல் 12.30 மணிக்கு 5 பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு 5 பேரும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.


Tags : CPCID ,Kolakkurikhi , Kallakurichi student, arrested, police, CBCID, court
× RELATED நெல்லை காங்கிரஸ் பிரமுகர்...