கொழும்பு: இலங்கையில் போராட்டத்தை ஒருங்கிணைத்த சமூக ஆர்வலர்கள் குறிவைத்து கைது செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் உணவு, உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு போராட்டம் வெடித்துள்ளது. மக்களின் சீற்றத்தால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஆகியோர் ராஜினாமா செய்தனர். இதையடுத்து பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் அங்கு போராட்டங்களை ஒடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்று டனிஸ் அலி என்ற சமூக ஆர்வலர் துபாய் செல்ல முயன்ற போது கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தில் வைத்து சிஐடி போலீஸ் படையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். டனிஸ் அலி கடந்த 13ம் தேதி இலங்கை தொலைக்காட்சி நிலையத்திற்குள் புகுந்து ஒளிபரப்பை தடுத்து நிறுத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனிடையே ராணுவம், போலீசார் இடையே உள்ளிட்ட ஆயுதப்படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இலங்கையின் கொழும்பு நகரில் அரசுக்கு எதிராக போராட்டங்களை ஒருங்கிணைத்த சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.