×

குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு

அகமதாபாத்: குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்த பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இருப்பினும், கிராமபுறங்களில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடக்கிறது. நேற்று அதிகாலை பொடாட் மாவட்டத்தில் உள்ள ரோஜித் கிராமம் மற்றும் சுற்றியுள்ள உள்ள கிராமங்களில் வசிக்கும் 50க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் பாவ்நகர், பொடாட் மற்றும் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அனைவரும் விஷம் கலந்த கள்ளச்சாராயம் குடித்திருப்பது தெரிந்தது. மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி 36 பேர் இறந்தனர். 50க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது. இது தொடர்பாக குஜராத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மதுவிலக்கு மற்றும் கலால் துறை இயக்குனர், குஜராத் தடய அறிவியல் ஆய்வக இயக்குனர் உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்ட குழுவை குஜராத் அரசு அமைத்துள்ளது.

குஜராத் டிஜிபி ஆஷிஷ் பாட்டியா நேற்று அளித்த பேட்டியில், ‘பொடாட்டின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பெண் உட்பட சிறு சிறு கொள்ளையர்கள் சிலர், அதிக விஷத்தன்மை கொண்ட மெத்தில் ஆல்கஹாலை தண்ணீரில் கலந்து போலி மதுபானத்தை தயாரித்து, ஒரு பாக்கெட் ரூ.20 என்று விற்றுள்ளனர். அதை வாங்கி குடித்தவர்களே உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தத்தில் மெத்தனால் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களில் 25 பேர் பொடாட் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள். 11 பேர் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்தவர்கள். ஜெயேஷ் (எ) ராஜூ என்பவர், தான் மேலாளராக பணிபுரிந்த  அகமதாபாத்தில் உள்ள ஒரு குடோனில் இருந்து 600 லிட்டர் மெத்தில் ஆல்கஹாலை திருடி, அதை பொடாட்டை சேர்ந்த உறவினர் சஞ்சய் என்பவருக்கு ஜூலை 25ம் தேதி விற்றுள்ளார். இதை போடாட்டின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சமூக விரோதிகளுக்கு சஞ்சய் விற்றுள்ளார். அவர்கள் அந்த ரசாயனத்தில் தண்ணீர் கலந்து விற்றுள்ளனர்,’ என்று தெரிவித்தார்.

Tags : Gujarat , Gujarat, complete abstinence, adulteration, increase
× RELATED சி.எஸ்.கே – குஜராத் அணிகள் மோதும் போட்டி: டிக்கெட் விற்பனை தொடக்கம்