×

மனைவி பிரிந்து சென்றதால் போலீஸ் ஏட்டு தற்கொலை: ஆவடி அருகே பரிதாபம்

சென்னை: ஆவடி அருகே மனைவி கோபித்துக்கொண்டு தாய்வீடு சென்றதால், போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆவடி அடுத்த அசோகா நகர் கோயில் பதாகை பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (39). கடந்த ஜனவரி 2021 முதல் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கலைச்செல்வி (30). தம்பதிக்கு ராதிகா (10) என்ற மகளும், ரக்‌ஷன் (6) என்ற மகனும் உள்ளனர். திருநாவுக்கரசு குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

வழக்கம்போல் கடந்த 22ம் தேதி மாலையும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக்கொண்டு புரசைவாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கலைச்செல்வி சென்றுவிட்டார்.  இதனால் திருநாவுக்கரசு மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் வெகுநேரம் ஆகியும் காலையில் கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தனர். இந்நிலையில் தான் நேற்று முன்தினமே தனியாக இருந்த திருநாவுக்கரசு, படுக்கையறையில் உள்ள மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விரைந்து வந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Tags : Avadi , Wife commits suicide by police
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!