பல்லாவரம்: பல்லாவரத்தில் இருந்து கவுல்பஜார் வழியாக கொளப்பாக்கம் செல்லும் வழியில், அடையாறு ஆற்றின் கரையை ஆக்கிரமித்து மலைபோல் குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் உள்ள ஆறு, குளம், ஏரி ஆகிய நீர்நிலைகளை பாதுகாக்க அரசு பல கோடி செலவில் தூர்வாருதல், அகலப்படுத்துதல் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. மேலும், எதிர்கால சந்ததிகளின் நலனை கருத்தில் கொண்டு, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது, நீர்வளத்தை காப்பதன் அவசியம் ஆகியவை குறித்தும், மக்களிடையே அரசு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கொளப்பாக்கம் மற்றும் கெருகம்பாக்கம் ஆகிய ஊராட்சிக்கு உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, அந்தந்த ஊராட்சி நிர்வாகம் முறையாக அப்புறப்படுத்தாமல், அலட்சியமாக அடையாறு ஆற்றின் கரையோரம் மலைபோல் குவித்து வைத்துள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.
இத்தனைக்கும் பல்லாவரத்தில் இருந்து கொளப்பாக்கம் வழியாக போரூர் செல்வதற்கு இந்த சாலையே பிரதானமாக உள்ளது. அதுமட்டுமின்றி, அடையாறு ஆற்றின் கரையோரம் குவித்து வைக்கப்படும் குப்பைகளை, அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் பன்றி, நாய், மாடு போன்ற விலங்குகள் மேய்ந்து வருவதால், குப்பைகளை கிளறி சாலை மட்டுமின்றி, அடையாறு ஆற்றின் உள்ளேயும் வீசுகிறது.
தற்போது ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி அதிகரிப்பதால் சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்திருந்து, நோய்கள் பரவுவதை தடுக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தும் வகையில், மக்கள் நலனில் சிறிதும் அக்கறையின்றி, மக்களின் நலனை காக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே, அலட்சியப் போக்கை கடைபிடித்து வருகிறது. ஒவ்வொரு மழைக்காலமும் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊருக்குள் வெள்ளம் புகுந்து, சென்னையே மூழ்கியது. கன மழை பெய்தாலும், ஊருக்குள் தண்ணீர் வராமல், மக்களும் வெள்ளத்தில் சிக்காமல் இருக்க நிரந்த தீர்வு காணும் வகையில் அரசு கடந்த ஆண்டு பல கோடி செலவு செய்து, அடையாறு ஆற்றை ஆழப்படுத்தி, அதன் இரு பக்க கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்றி, கரையை பல அடிக்கு உயர்த்தியது.