சென்னை: ஓய்வு பெற்று 4 ஆண்டுகளுக்கு பிறகு நிலுவை தொகையை மூத்த குடிமகனுக்கு எஸ்சி, எஸ்டி ஆணையம் வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் வெளியிட்ட அறிக்கை: கருணாநிதி என்ற மனுதாரர், சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணியாளராக 27 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு 2009ம் ஆண்டு முதல் தேர்வுநிலைப் பணிக்கு ஊதியம் நிர்ணயம் செய்து வழங்குமாறு, அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் கலந்தாய்வு மய்யப் பேராசிரியர் மற்றும் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் இப்பிரச்னையில் தலையிட்டு, கருணாநிதிக்கு சேர வேண்டிய தேர்வுநிலை நிலுவை தொகையை உடனடியாக வழங்க தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மாணவர் கலந்தாய்வு மய்யப் பேராசிரியர் மற்றும் தலைவருக்கு ஆணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் மே 27ம் தேதி மனுதாரருக்கு4ஆண்டுகளாக நிலுவையில் இருந்த தொகை வழங்கப்பட்டது.