நித்திரவிளை : கொல்லங்கோடு நகராட்சி ஒன்பதாவது வார்டு பகுதியான சிறை என்னுமிடத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் படகு கழிவுகளை மர்ம நபர்கள் வாகனத்தில் வந்து வீசி சென்றுள்ளனர், அந்த கழிவுகளில் மழைநீர் படும் போது துர்நாற்றம் வீசுகிறது இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இது சம்பந்தமாக வார்டு கவுன்சிலர் அஜிதா செல்வர்ட் கூறியதாவது:
எனது வார்டு பகுதியான சிறை என்னுமிடத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் வாகனத்தில் வந்து படகில் உள்ள கழிவுகளை வீசி சென்றதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர், சாலையிலே கழிவுகளை கொட்டி சென்றதால் தற்போது அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கழிவுகளிலிருந்து வீசும் துர்நாற்றம் காரணமாக பொதுமக்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே நித்திரவிளை மற்றும் கொல்லங்கோடு காவல் நிலைய போலீசார் நள்ளிரவில் வாகனத்தில் வந்து கழிவுகளை வீசி சென்ற கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.