திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயில் உள்ளது. இங்கு ஆடி கிருத்திகை மற்றும் ஆடி பரணி விழா நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் பல பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். காவடிகள் எடுத்தும் முடிகாணிக்கை செலுத்தியும் முருகருக்கு தங்களது வேண்டுதலை பக்தர்கள் நிறைவேற்றினர். பக்தர்கள் எந்த சிரமமுமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக மலைக்கோயிலில் உள்ள காவடி மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகர் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகின்றார். ஆடி கிருத்திகை முன்னிட்டு சரவண பொய்கை குளத்தில் தெப்ப திருவிழா நடத்தப்பட்டது.
மூன்று நாள் தெப்பத்திரு விழா தொடங்கியது. 2ம் நாள் தெப்பத்தில் முருகர், வள்ளி, தெய்வானையுடன் ஐந்துமுறை வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள், கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் முழங்கினர். 3ம் நாள் தெப்ப உற்சவம் நடைபெற்றது.இதில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முருகர், தெப்பத்தில் 7 முறை சுற்றிவந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
ஆடி கிருத்திகை முன்னிட்டு திருத்தணி நகர் முழுவதும் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டது. இங்கு பக்தர்கள், தங்களுக்கு தேவையான சாமி படங்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொம்மைகள், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரருபன் ஆகியோர் நடவடிக்கையால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.