×

எட்டயபுரம் அருகே பயங்கரம் காதல் திருமணம் செய்த மகள், மருமகன் வெட்டிக்கொலை: 26வது நாளில் தந்தை வெறிச்செயல்

எட்டயபுரம்: எட்டயபுரம் அருகே வீடு புகுந்து காதல் தம்பதியை வெட்டிக் கொன்ற பெண்ணின் தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். திருமணம் முடிந்த 26வது நாளிலேயே இளம் ஜோடி படுகொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே வீரப்பட்டி சேவியர் காலனியை சேர்ந்தவர் முத்துக்குட்டி (44). இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது ஒரே மகள் ரேஷ்மா (20), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர், இதே பகுதியை சேர்ந்த உறவினரான வடிவேல் மகன் மாணிக்கராஜ் (26) என்பவரை காதலித்துள்ளார். மாணிக்கராஜ், கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்தார். தொடர்ந்து ரேஷ்மாவும், மாணிக்கராஜிம் காதலை வளர்த்து வந்தனர். இவர்களது காதலுக்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் 26ம் தேதி ரேஷ்மாவிற்கு பூப்புனித நீராட்டு விழா நடந்துள்ளது. அதற்கு மறுநாள் காதலர்கள் இருவரும் ஊரை விட்டு தலைமறைவாகினர். இதுகுறித்து முத்துக்குட்டி, எட்டயபுரம் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்தார். காதலர்கள் இருவரும் ஜூன் 29ம் தேதி திருமணம் செய்து கொண்டு, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசித்து வந்தனர். ஊருக்கு திரும்ப நினைத்திருந்த காதல் ஜோடியிடம், இங்கு நிலைமை சரியில்லை, தற்போது ஊருக்கு வர வேண்டாமென உறவினர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால் அதனை பொருட்படுத்தாமல் காதல் தம்பதி, கடந்த வாரம் ஊருக்கு வந்து, மாணிக்கராஜின் தாயார் பேச்சியம்மாளுடன் வசித்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை பேச்சியம்மாள், 100 நாள் திட்ட வேலைக்கு சென்று விட்டார். மாலை 3.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பிய அவர், மகனும், மருமகளும் ரத்த வெள்ளத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்து கதறினார்.  தகவலறிந்த எட்டயபுரம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், காதல் தம்பதியை பெண்ணின் தந்தை முத்துக்குட்டி வெட்டிக் கொன்று விட்டு தப்பியோடியது தெரிய வந்தது.

கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை முத்துக்குட்டியின் வீட்டில் போலீசார் கைப்பற்றினர். மாணிக்கராஜ், ரேஷ்மா ஆகியோரது உடல்களை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய முத்துக்குட்டியை தேடி வருகின்றனர். காதல் திருமணம் செய்த மகள் மற்றும் மருமகனை திருமணம் முடிந்த 26வது நாளிலேயே தந்தை வெட்டிக் கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Ettayapuram , Daughter-in-law, son-in-law hacked to death near Ettayapuram after a gruesome love marriage: Father goes berserk on 26th day
× RELATED எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் மகளிர் தினவிழா