×

எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி ஊழல் வழக்கு விரைவில் விசாரணை!: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உறுதி..!!

டெல்லி: எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல் புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. நெடுஞ்சாலை டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகவும், இதுகுறித்து 2018ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

எடப்பாடி பழனிசாமி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று ஆர்.எஸ்.பாரதி மனுவில் புகார் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெகதீஸ் சக்ரா, புகார் மீதான விசாரணையை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாகவும், மேற்கொண்டு வழக்கில் நீதிமன்றம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2018ம் ஆண்டில் இவ்வழக்கில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இதன்பிறகு இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில், தமிழக அரசு தரப்பில் இவ்வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் முறையிடப்பட்டது. இதையடுத்து வழக்கு விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உறுதி அளித்துள்ளார்.


Tags : Edapadi Palanisamy ,Supreme Court ,Chief Justice ,N. CV Ramana , Edappadi Palaniswami, Rs 4,800 crore corruption, investigation
× RELATED கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான...