பென்னாகரம்: கர்நாடக அணைகளில் இருந்து கடந்த வாரம் மழை காரணமாக விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கும் மேல் உபரிநீர் திறந்து விடப்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பால், பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்று முன்தினம், ஒகேனக்கல்லுக்கு 28 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில், பரிசல் இயக்கவும், அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், நேற்று 14வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை தினமான நேற்று, சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.