தண்டையார்பேட்டை: காசிமேடு கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் மாலை பாறையில் நின்றபடி கடலுக்குள் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த மாணவியை மீன்பிடி துறைமுக போலீஸ் எஸ்ஐ மீனவர்களுடன் படகில் சென்று உதவியுடன் காப்பாற்றினார்.காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே வார்ப்பு பகுதியில் நேற்று முன்தினம் மாலை எஸ்ஐ மனோகரன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்குள்ள பாறை மீது நின்றிருந்த ஒரு இளம்பெண் திடீரென கடலுக்குள் குதிப்பதை பார்த்து எஸ்ஐ ஓடினார்.பின்னர் அப்பகுதி மீனவர்களுடன் எஸ்ஐ மனோகரன் பைபர் படகில் சென்று, கடலுக்குள் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த இளம்பெண்ணை காப்பாற்றினார்.
காசிமேடு மீன்பிடி துறைமுக இன்ஸ்பெக்டர் பிராவின்டேனி நடத்திய விசாரணையில், அந்த பெண் ராயபுரத்தை சேர்ந்த பிளஸ் 2 முடித்த பள்ளி மாணவி என தெரியவந்தது. மேலும், குடும்பப் பிரச்னை காரணமாக மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதை தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோரை போலீசார் வரவழைத்து, அறிவுரை கூறி பள்ளி மாணவியை பத்திரமாக அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முயற்சித்த மாணவியை துணிச்சலுடன் காப்பாற்றிய எஸ்ஐ மனோகரனை பாராட்டி, இன்ஸ்பெக்டர் பிரான்வின்டேனி சன்மானம் வழங்கினார்.