×

நீரஜ் சோப்ராவுக்கு அன்புமணி, ஜி.கே.வாசன் வாழ்த்து

சென்னை: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளி வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். அவரது சாதனைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் சாதிப்பது இந்தியாவுக்கு சவாலாகவே இருந்து வந்தது.

2003ம் ஆண்டுக்கு பிறகு இப்போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்லாத நிலையில், 18 ஆண்டுகளுக்குப்பின் வரலாறு படைக்கப்பட்டிருப்பது இந்தியர்களுக்கு பெருமையளிக்கும் விஷயமாகும். இதேபோல், ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்காவில் 18வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் இந்தியாவின் சார்பில் பங்குபெற்ற விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது. இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் மென்மேலும் பல வெற்றிகளையும், பதக்கங்களையும், விருதுகளையும் பெறவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Tags : Anbumani ,GK ,Vasan ,Neeraj Chopra , Anbumani, GK Vasan congratulate Neeraj Chopra
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத பாஜவை...