உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த புத்தளி மற்றும் மலையாங்குளம் ஆகிய கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டப் பணிகள், அரசின் தொகுப்பு வீடு கட்டுமானப் பணிகள் மற்றும் பண்ணை குட்டை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அரசின் நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேற்று ஜல்சக்தி அபியான் மத்திய குழுவினருடன், காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி மற்றும் செயற்பொறியாளர் அருண் உள்ளிட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது அரசின் திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு பணிகள் குறித்து அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். மேலும் அரசு திட்டத்தின் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து கிராம மக்களிடம் கேட்டறிந்தனர். நிகழ்வின் போது உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், வரதராஜ், உதவி பொறியாளர் இராஜேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.