×

சித்தூர் அருகே இன்று விபத்து; தடுப்பு சுவரில் போலீஸ் வாகனம் மோதி சப் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் பலி: 3 பேர் படுகாயம்

திருமலை: ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வழக்கு விசாரணைக்காக வந்தபோது தடுப்பு சுவரில் போலீஸ் வாகனம் மோதி எஸ்ஐ உட்பட 3 பேர் பலியாகினர். மற்ெறாரு எஸ்ஐ உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரை சேர்ந்த போலீஸ் எஸ்ஐக்கள் அவினாஷ், தீட்சித் மற்றும் போலீஸ்காரர்கள் அணில், சரவணா, பஸ்வா ஆகியோர் வழக்கு விசாரணைக்காக இன்று காலை காரில் திருப்பதி நோக்கி வந்தனர். சித்தூர் அடுத்த பூதலப்பட்டு - நாயுடுபேட்டை சாலையில் உள்ள சவுடேபல்லி என்ற இடத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எஸ்.ஐ.அவினாஷ், காவலர் அணில், கார் டிரைவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

எஸ்.ஐ.தீட்சித், காவலர்கள் சரவணா, பஸ்வா ஆகியோர் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அங்கு சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த சித்தூர் டிஎஸ்பி சுதாகர்ரெட்டி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் பலியான 3 பேரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கார் அதிவேகமாக வந்தபோது டிரைவர் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இந்த விபத்து காரணமாக திருப்பதி - வேலூர் சாலையில் போக்குவரத்து பாதித்தது.

Tags : Chittoor , Accident near Chittoor today; Police vehicle crashes into barricade; 3 including sub-inspector killed: 3 seriously injured
× RELATED நடைபெற உள்ள பொதுத்தேர்தலில்...