சென்னை: சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, வெள்ளக்கோயில் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா (23). இவர், சென்னையில் உள்ள ஒரு கால்சென்டரில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் அறந்தாங்கியை சேர்ந்த வாலிபர் சந்தோஷ்குமார் என்பவருடன் சேர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, ஜயா தெருவில் ஒரு வீடு எடுத்து ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி காலை மஞ்சுளா வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக சந்தோஷ்குமார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்படி சிந்தாதிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த வீட்டின் உரிமையாளர் பாலநாராயணஷா கொடுத்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மஞ்சுளா வேறு ஒரு நபருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால், அவரது நடத்தையில் சந்தேகமடைந்த சந்தோஷ்குமார் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த 21ம் தேதி இரவு வேலை முடித்து வந்த சந்தோஷ்குமார், மஞ்சுளாவிடம் தகராறு செய்து கைகள் மற்றும் துப்பட்டாவால் மஞ்சுளாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்காக மாற்றம் செய்து புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, சின்ன அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (21) என்பவரை கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய துப்பட்டா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சந்தோஷ்குமார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.