காஞ்சிபுரம்: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 188 நாடுகள் பங்கேற்பதால் ஒரே நேரத்தில் 188 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார். மாமல்லபுரத்தில் சர்வ தேச அளவில் 44 வது செஸ் போட்டி வரும் 28ம் தேதி துவங்கவுள்ளது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு தமிழக அரசு சார்பில் நடைபெற்று வருகின்றது .
இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி ஊராட்சியில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மரம் நடும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்எல்ஏக்கள் க.சுந்தர் , எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு 188 மரக்கன்றுகள் நடும் விழாவினை துவக்கி வைத்தனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 188 நாடுகள் கலந்து கொள்வதால் 188 மரக்கன்றுகள் ஒரே நேரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன்உடன் இனைந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் நடவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, திட்ட அலுவலர் தேவி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன்,ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார்,மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜசேகர், ஒன்றிய குழு துணை தலைவர் திவ்யபிரியா, திமுக ஒன்றிய செயலாளர் பி எம் குமார்,அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.