காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் ஏற்றுமதியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் குறு,சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதியில் செய்துள்ள அரசின் சாதனைகள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் சந்தேகங்களுக்கு திட்ட விளக்கங்களை குறித்து எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார் . இதில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரிய தொழில்களான ஜவுளி, ஆட்டோமொபைல் தொழில்களுடன், மின்னணுவியல், பாதுகாப்பு, ஏரோ ஸ்பேஸ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றிலும் நம் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. தமிழ்நாட்டில் தொழில்துறையில் வேகமாக வளர்ந்து வரும் மாவட்டங்களில் காஞ்சிபுரம் முதல் மாவட்டமாக உள்ளது. இங்கு 42 ஆயிரத்து 244 பதிவு செய்ப்பட்ட குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன
இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 9.25% ஆக உள்ளது. இதில் தமிழகத்தின் ஏற்றுமதியில் காஞ்சிபுரம் மாவட்டம் 28% பங்களிப்பை அளிக்கின்றது. நடப்பு ஆண்டில், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளில் குறிப்பாக வளர்ந்து வரும் துறைகளான மின்சார வாகனங்கள், மின்சார வாகன பேட்டரி, விண்வெளி, மருந்து, பெட்ரோ கெமிக்கல்ஸ் போன்றவற்றில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
தழிமிக முதல்வரின் வழிகாட்டுதலின்படி குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ₹240 கோடி முதலீட்டில் 2 ஆயிரத்து 545 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 10 ஏற்றுமதி சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்நிறுவனங்களின் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கொரோன பெருந்தொற்றுக்கு பிறகு தமிழ்நாட்டிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-க்கு 2021-22 ஆம் ஆண்டில ₹ 11 ஆயிரம் கோடி மதிப்புடைய பொருட்களும், ஆஸ்திரேலியாவிற்கு ₹ 2 ஆயிரத்து 700 கோடிமதிப்புடைய பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எனவே, ஏற்றுமதியாளர்கள் புதிதாக உருவாகியுள்ள இதுபோன்ற வாய்ப்புக்களை பயன்படுத்தி நமது ஏற்றுமதியினை அதிகரிக்க வேண்டும் என பேசினார். இந்நிகழ்வில் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சுஜிதாமஸ், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, எம் எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன், மேயர் மகாலட்சுமியுவராஜ், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் சுபாஷ், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.