ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே, ஒரகடம் அடுத்த வடக்குபட்டு கிராமப் பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த 3ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கிராமத்தில் தொன்மை வாய்ந்த ஆதி கால தமிழர்கள் வாழ்விட தடயங்கள் கொண்ட மணல்மேடு ஒன்று காணப்பட்டது. இம்மேட்டு பகுதியில் இருந்து சில நாட்கள் முன்பு பழமை வாய்ந்த சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு, தற்போது சிறிய கூரை அமைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் அப்பகுதியில் ஆராய்ச்சி மேற்கொள்ள முடிவு மேற்கொள்ளப்பட்டது. தற்போது 100 அடி நீளம், 100 அடி அகலத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்டம் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து சென்னை வட்டார தொல்லியல் கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் அகழ்வாய்வு பணியில் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் பழங்கால கட்டிட சுவர்கள் கண்டெடுக்கப்பட்டது.
மேலும் அதனை சுற்றி பள்ளம் தோன்டிய போது பழங்கால கல்மணி, கண்ணாடி மணி, எலும்பு உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். எந்த ஆண்டு வாழ்ந்த மக்கள் பயன்படுத்தியது, அவர்களின் கலாச்சாரம் குறித்து ஆய்வுக்கு பின்னர் தெரிய வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.