×

அதிமுகவில் நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் செயல்பட அனுமதி: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள் என ஓ.பன்னீர்செல்வம்  அறிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், கட்சிக்குள் கலவரம், வழக்கு, ரகசிய பேச்சுவார்த்தை என குழப்பங்கள் நீடித்து வருகிறது. இதற்கிடையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்,  மாறி மாறி கட்சியின் நிர்வாகிகளை, அவர்களின் பொறுப்புகளில் இருந்து நீக்கி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அதிமுகவில் பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும், அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதி செயலாளர் மற்றும் தொகுதி இணை செயலாளர்கள் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டு, ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் மீண்டும் அந்தந்த பொறுப்புகளில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதையும், காலியாக உள்ள பொறுப்புகள் விரைந்து நிரப்பப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதிமுகவினர் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள், தொகுதி இணை செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : AIADMK , All sacked AIADMK executives allowed to function: OPS notification
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...