×

சிறப்பாக பணிபுரிந்த 13 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டினார் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த 13 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

வெளிநாட்டு பெண்மணிக்கு உதவிய நுண்ணறிவுப்பிரிவு பெண் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு:

கனடா நாட்டின் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் திருமதி.ஆனிசைமன் வ/66 என்பவர் தனது உறவினர்களைப் பார்க்க கடந்த 17.04.2022 அன்று சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்து சென்னை, வேப்பேரி பகுதியில் தங்கியுள்ளார். சுற்றுலா விசா காலாவதியானதை அவர் கவனிக்காமல் கடந்த 15.06.2022 அன்று கனடாவுக்குத் திரும்புவதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளார். அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிக காலம் தங்கியதால், அவரால் இந்தியாவை விட்டு வெளியேற முடியவில்லை. இந்நிலையில் கடந்த 17.06.2022 அன்று காவல்துறை அனுமதிச்சான்றிதழுக்காக காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ஜெயசுதா அவர்கள் FRROவின் நடைமுறைகளை அவருக்கு எளிதாக விளக்கி, FRRO அலுவலகத்திற்கு சென்று முறையிடும் படி தகுந்த ஆலோசனை கூறி அனுப்பியுள்ளார். ஆய்வாளரின் ஆலோசனையின்படி, அவர் FRRO அலுவலகத்திற்கு சென்று ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். அதன் பின்னர் காவல் ஆணையாளர் அலுவலக பாஸ்போர்ட் பிரிவை அணுகி முறையாக சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளார். காவல் ஆணையாளர் அலுவலக பாஸ்போர்ட் பிரிவு அதிகாரிகள் முறையாக ஆவணங்களை சரிபார்த்து அந்த பெண்மணியை விசாரணை செய்து தகுதியின்படி கடந்த 24.06.2022 அன்று காவல் துறை அனுமதிச்சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ஆனிசைமன் FRRO அலுவலகத்தில் காவல்துறை அனுமதிச்சான்றிதழைச் சமர்ப்பித்து இந்தியாவை விட்டு வெளியேறும் அனுமதியை பெற்று கடந்த 06.07.2022 அன்று கனடா நாட்டிற்கு திரும்பியுள்ளார். தனது சொந்த நாடு திரும்பிய பெண்மணி ஆனிசைமன் சென்னை பெருநகர காவல் நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர்.திருமதி.ஜெயசுதா அவர்களின் பணியை மனமாற  பாராட்டி இ-மெயில் மூலம் காவல் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  

2019ம் ஆண்டு 14 வயது சிறுமியிடம் பாலியல் உறவு கொண்ட நபர் மற்றும் உடந்தையாக இருந்த பெண் உட்பட இருவருக்கு ஆயுள்தண்டனையும் ஆண் நபருக்கு ரூ.60,000/- மற்றும் பெண்ணுக்கு ரூ.70,000/-அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு:  

கடந்த 2019 ஆண்டு தி.நகர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 14 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து வந்த 45 வயது நபர் பாலியல் உறவு கொண்டுள்ளார். இதற்கு உடந்தையாக பெண் ஒருவரும் இருந்துள்ளார். இது  தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் W-25 தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுமியிடம் பாலியல் உறவு கொண்ட  நபர் மற்றும் உடந்தையாக இருந்த பெண் ஆகிய இருவரை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், W-25 தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.N.கௌசல்யா, தலைமையிலான காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், நீதிமன்ற அலுவல் பணிபுரியும் முதல் நிலைக்காவலர் திருமதி.A.ஷோபனா முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் கடந்த 18.07.2022 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேற்படி வழக்கில் எதிரிகளான 2 நபர்கள் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை தண்டனையும் மற்றும் ஆண் நபருக்கு ரூ.60,000/- அபராதமும், பெண்ணுக்கு ரூ.70 ஆயிரம் அபராதம் விதித்து கனம் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.

பாரிமுனை பகுதியில் 2 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய பெங்களூரைச்சேர்ந்த நபர் கைது. ரூ.3,99,500/-, 1 கார் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல்:

மூசா, வ/62, த/பெ.முகமது என்பவர், பாரிமுனை, ரத்தன் பஜார் பகுதியில் பொம்மைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரின் கடை அருகில் முகேஷ் என்பவர் துணிக்கடை நடத்தி வருகிறார். மூசா மற்றும் முகேஷ் ஆகியோர் கடந்த 01.07.2022 அன்று இரவு அவர்களது கடைகளை பூட்டிவிட்டு மறுநாள் (02.07.2022) காலை கடைக்கு வந்தபோது, இருவரது கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு, மூசாவின் பொம்மை கடையிலிருந்த பணம் ரூ.1,40,000/- மற்றும் முகேஷின் துணிக்கடையிலிருந்து பணம் ரூ.5 லட்சம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து மூசா மற்றும் முகேஷ் ஆகியோர் கொடுத்த புகாரின்பேரில், C-1 பூக்கடை காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பூக்கடை உதவி ஆணையாளர் தனிப்படையைச்சேர்ந்த உதவி ஆய்வாளர் திரு.K.பொன்பாண்டியன், தலைமைக்காவலர் திரு.F.சார்லஸ், (த.கா.26762), முதல் நிலைக்காவலர் திரு.B.செந்தில்குமார், இரண்டாம் நிலைக்காவலர் திரு.S.சுகுமார்  ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர்  சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து மேற்படி திருட்டில் ஈடுபட்ட ஆனந்த், வ/34, த/பெ.நாகராஜு, கோழிப்பாரம் கேட், பெங்களூர், கர்நாடக மாநிலம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.3,99,500/-, 3 செல்போன்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய Xylo கார், பூட்டு உடைக்க பயன்படும் இரும்பு பொருட்கள், கையுறைகள், முகமூடிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

எழும்பூர் பகுதியில் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற நபரை கைது செய்த ஆயுதப்படை காவலருக்கு பாராட்டு:
    
சென்னை பெருநகர காவல், புதுப்பேட்டை ஆயுதப்படையில் பணிபுரியும் முதல் நிலைக்காவலர் திரு.L.சுகுமாறன், என்பவர் கடந்த 18.07.2022 அன்று எழும்பூர் நீதிமன்றத்திலிருந்து கைதிகளை 2 காவல் வாகனங்களில் ஏற்றி புழல் சிறைக்கு கொண்டு செல்லும் கைதி வழிக்காவல் பணியிலிருந்த போது, காவல் வாகனம் பாந்தியன் ரவுண்டானா அருகே வந்த போது, காவல் வாகனத்தை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள், காவல் வாகனத்திலிருந்த ஒரு கைதிக்கு கஞ்சா பார்சலை கொடுத்துள்ளனர்.

இதனை பின்னால் வந்த காவல் வாகனத்தில் பணியிலிருந்த மேற்படி ஆயுதப்படை காவலர் திரு.L.சுகுமாறன் பார்த்து சுதாரித்துக்கொண்டு வாகனத்திலிருந்து இறங்கி இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்ல முயன்றவர்களில் ஒருவரை மற்ற போலீசார் உதவியுடன் மடக்கிப்பிடித்துள்ளார். மற்றொரு குற்றவாளி இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றார். பிடிபட்ட நபரை F-2 எழும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். F-2 எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில் பிடிபட்ட நபர் விக்னேஷ், வ/21, த/பெ.செல்வமணி, என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட விக்னேஷிடமிருந்து 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தேனாம்பேட்டை பகுதியில் கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்ற வழக்கில் இருவர் கைது.  

சென்னை, மண்ணடி, மரக்காயர் தெரு, எண்.16/45 என்ற முகவரியில் அப்துல் அப்தாஹிர், த/பெ.முகமது யூசுப் என்பவர் வசித்து வருகிறார். அப்துல் அப்தாஹிர் பையில் ரூ.4.45 லட்சத்தை பணத்துடன் கடந்த 09.06.2022 அன்று மாலை 5.40 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் G.N  செட்டி சாலை மேம்பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் வந்த 4 நபர்கள் மேற்படி அப்துல் அப்தாஹிரை வழிமறித்து கத்தியைக்காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.4.45 லட்சம் அடங்கிய பணப்பையை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். இது குறித்து அப்துல் அப்தாஹிர்  E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வவாளர் திரு.A.அருள்ராஜ், தலைமைக்காவலர் திரு.G.பொன்னுவேல், (த.கா.32305) ஆகியோர் சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட ரகுமான், வ/24, த/பெ.முகமது அனிபா, கிழக்கு தாம்பரம், சென்னை என்பவரை கடந்த 23.06.2022 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ரூ.50,000/- மற்றும்  4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் விசாரணையில் ரகுமான் அளித்த தகவலின் பேரில் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகிருந்த சாருஹாசன் (எ) சாரு, வ/26, த/பெ.பாலு, எண்.7/326, இராமநாதபுரம் மாவட்டம் என்பவரையும் கடந்த 03.07.2022 கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராயப்பேட்டை, மயிலாப்பூர் மற்றும் சுற்றுப்புறங்களில் இருசக்கர வாகனத்தில் சென்று 16 செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேர் கும்பல் கைது. 16 வயது சிறுமியும் பிடிபட்டார். 7 செல்போன்கள், 1 ஆப்பிள் ஐபேட், பணம் ரூ.15,000/- மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கடந்த 15.06.2022 அன்று மாலை, கோபாலபுரம் D.A.V.பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்மணியின் செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். மேலும், 19.06.2022 அன்று அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த 62 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் செல்போனையும் இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். மேற்படி 2 வழக்குகள் குறித்து E-2 இராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

E-2 இராயப்பேட்டை காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.v.சிவபாண்டியன், (த.கா.26980), முதல் நிலைக்காவலர் திரு.A.அருண்பாண்டியன் (மு.நி.கா.44730),  காவலர் திரு.M.மகேஷ், (கா.எண்.50182) மேற்படி சம்பவம் நடைபெற்ற இடங்களின் அருகிலுள்ள சுமார் 42 சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து, குற்றவாளிகள் அடையாளம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் குறித்து விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.விவேக் (எ) குள்ளா, வ/26, த/பெ.முரளி, தேனாம்பேட்டை, சென்னை, 2.ஜெகன், வ/25, த/பெ.வீனஸ், காமராஜர் சலை, சென்னை,

3.ஜெகதீசன், வ/24, த/பெ.சந்திரன், கடலூர் மாவட்டம், 4.சரவண பெருமாள், வ/19, த/பெ.முருகன், சண்முகபுரம், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் ஒரு 16 வயது சிறுமி என்பதும், இவர்கள் அனைவரும் இருசக்கர வாகனங்களில் சென்று, சென்னையில் பல்வேறு பகுதிகளில் 16 செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதன்பேரில் மேற்படி 4 எதிரிகளும் கைது செய்யப்பட்டனர். 16 வயது சிறுமியும் பிடிபட்டார். அவர்களிடமிருந்து 7 செல்போன்கள், 1 ஆப்பிள் ஐபேட், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் பணம் ரூ.15,000/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்த 13 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (23.07.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.


Tags : Chennai ,Metropolitan Police Commissioner , Chennai Metropolitan Police Commissioner called and praised 13 police officers and staff for their excellent work
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...