சென்னை: குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்க செய்ய சிபிஐ-க்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. குட்கா மற்றும் மாவா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை மொத்தமாக விற்பனை செய்வோரிடமிருந்து லஞ்சம் பெற்றனர் என்று முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10 பேர் மீதான புகார் ஆகும். இதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளை தவிர்த்து, 8 பேரிடம் விசாரணை நடத்த தமிழ்நாடு அரசின் அனுமதி தேவை என சிபிஐ அதிகாரிகள் கடிதம் எழுதினர்.
இந்த பட்டியலில் பி.வி.ரமணா, அப்போதைய வணிகவரி துணை ஆணையர் குறிஞ்சிச்செல்வன், வணிகவரி அலுவலர் கணேசன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மாஜி உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி லட்சுமி நாராயணன், முருகன், புழல் சரக காவல்துறை உதவி ஆணையர் செங்குன்றம் காவல்நிலைய முன்னாள் ஆய்வாளர் வி.சம்பத், சென்னை மாநகராட்சியின் சுகாதாரக்குழுவின் தலைவர் ஏ.பழனி ஆகியோர் மீது சிபிஐ குற்றச்சாட்டை முன்வைத்தது. இந்த பட்டியலில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளான சென்னை மாநகர முன்னாள் ஆணையர்கள் எஸ்.சார்ஜ், டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் மீது விசாரணை நடத்த உள்துறை அமைச்சகத்தின் இசைவை சிபிஐ கேட்டுள்ளது.
இந்த நிலையில், பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 8 பேர் மீது விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் சிபிஐக்கு அனுமதி அளித்துள்ளது.