×

நீடாமங்கலம் பகுதியில் பயிரில் பாக்டீரியா இலை கருகல் நோய் கட்டுப்படுத்த வழிமுறைகள்-வேளாண் அறிவியல் நிலையம் தகவல்

நீடாமங்கலம் : நெல் பயிரில் பாக்டீரியா இலை கருகல் நோய் குறித்து திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,நீடாமங்கலம் பகுதியில் தற்போது குருவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்களில் பாக்டீரியா இலை கருகல் நோய் தென்படுகிறது. இதன் அறிகுறிகளான இலைகள் மஞ்சள் நிறமாக மாறி வைக்கோல் போல காய்ந்து, செடி முழுவதும் இறந்தது போல காட்சியளிக்கும்.

இளம் நாற்றுக்களை பார்க்கும்போது பாதிக்கப்பட்ட இலை பழுத்து மேல் நோக்கி சுருண்டு இருக்கும். இலையின் நுனிப் பகுதியில் இருந்து மஞ்சள், வெள்ளை நிறமாகி அதோடு மட்டுமல்லாமல் ஓரப்பகுதிகளில் அலை, அலையாக வளைந்து நெளிந்து சுருண்டு காய்ந்தது போல காட்சியளிக்கும். அதிகாலையில் வயல்வெளிகளில் இலைகளைப் பார்க்கும்போது, இலையில் பால் போன்ற பாக்டீரியா திரவம் கசிவது போன்ற தோற்றத்தை பார்க்க முடியும். இந்த திரவம் காய்ந்து பிறகு மஞ்சள் வண்ணத்தில் மணிகள் போலவும் காட்சியளிக்கும்.

நோய் தாக்கப்பட்ட வைக்கோல் மற்றும் கட்டைகள் வயல்களில் இருக்கும் போதும் களைகள் அதிகளவு வயலில் இருந்தாலும், இந்த நோய் நெற்பயிரை தாக்கும். அதிக காற்று, சூடான வெப்பநிலை, அதிக ஈரப்பதம், மழை இருக்கும் போதும் நோய் தாக்கப்பட்ட இலைகளில் உள்ள அந்த திரவம் மற்ற வயலுக்கு எளிமையாக பரவும். தழைச்சத்தை தேவைக்கு அதிகமாக கொடுக்கும் போதும் இந்த நோய் பரவ வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

நோய் தாக்குதல் தெரிய ஆரம்பிக்கும் போது 20 சதம் சாண கரைசலை வயல்களில் தெளித்து கட்டுப்படுத்தலாம். அதாவது 20 சதம் சாண கரைசலுக்கு 200 கிராம் பசுஞ்சாணத்தை ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிய விட்டு வடிகட்டி அந்த கரைசலை எடுத்து வயலுக்கு தெளிக்க வேண்டும்.செயற்கை பூஞ்சான கொல்லிகளான ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்கிளின் கலவை 120 கிராம் உடன் 500 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு கலந்து தெளிக்க வேண்டும்.

தேவைப்பட்டால் 15 இடைவெளியில் மறுமுறை தெளிக்க வேண்டும் அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். மேற்கண்ட மேலாண்மை முறைகளை பின்பற்றி நெல் பயிரில் பாக்டீரியா இலை கருகல் நோயிலிருந்து விடுபட வேண்டும்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags : Needamangalam ,Sciences , Needamangalam: Needamangalam Agricultural Science Center in Thiruvarur District
× RELATED கோடை நடவு பயிரில் எலிகளை கட்டுப்படுத்த பறவை தாங்கி