திருவள்ளூர்: திருவள்ளூரில் நீட் தேர்வு தோல்வி பயத்தில் வார்னிஷ் குடித்து பள்ளி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் எம்ஜிஎம் நகர் வீரலட்சுமி தெருவை ேசர்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் மிகச்சிறந்த மதிப்பெண் பெற்றிருந்தாள். இதையடுத்து மருத்துவம் படிப்பில் சேர, கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த மாணவி நீட் தேர்வு எழுதினாள். இதற்கிடையில், கடந்த சில நாட்களாக, நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்து தோற்றுவிடுவோமோ என பள்ளி மாணவி புலம்பி வந்தாள்.
அவளை பெற்றோர் சமாதானப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் நீட் தேர்வு தோல்வி பயத்தில் இருந்த பள்ளி மாணவி வார்னிஷை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாள். அவளது வாயில் நுரையுடன் மயங்கி விழுந்ததை பார்த்து அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் பள்ளி மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.