சென்னை: தன்னை கட்சியில் இருந்து நீக்கியதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும், ஈபிஎஸ்-ன் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு, ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத் கடிதம் அனுப்பினார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்திற்கு எதிராக தேனி எம்.பி. ரவீந்திரநாத் மக்களவை சபாநாயகருக்கு புதிய கடிதம் ஒன்றை எழுதினார். அதில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியில் இருந்து நீக்க எந்த ஒரு முகாந்திரமும் இல்லை.
ஏற்கனவே, ஈபிஎஸ் ஆல் கடந்த 11ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு சட்ட ரீதியானது அல்ல என்றும், பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதாகவும், இது தொடர்பாக ஏற்கெனவே இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்ததாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். எனவே, இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னை நீக்கக்கோரி அளித்த மனுவை நிராகரிக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என, ஏற்கெனவே நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் கடிதம் அனுப்பிய நிலையில், அதற்கு எதிரான பதில் கடிதத்தை ரவீந்திரநாத் எம்.பி. அனுப்பியுள்ளார்.