×

காவல்துறை பதிலளிக்கும் வரை அதிமுக மாவட்ட செயலாளர்கள், ஈபிஎஸ் ஆதரவாளர்களை கைது செய்யக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காவல்துறை பதிலளிக்கும் வரை அதிமுக மாவட்ட செயலாளர்கள், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை கைது செய்யக்கூடாது என்று சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு நடைபெற்ற தினத்தில் நடந்த கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அக்கட்சியை சேர்ந்த 4 மாவட்ட செயலாளர்களை கைது செய்யக்கூடாது என சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு உத்தரவிட்டுள்ளது. கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே வன்முறை ஏற்பட்டது. இதில் சுமார் 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி மற்றும் தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்ட 11 பேர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக பதில் அளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை வருகின்ற 25ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, காவல்துறை பதிலளிக்கும் வரை அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டார்.


Tags : AIADMK ,EPS , Police, ADMK district secretaries, EPS supporters, court
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...