திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக தள்ளுவண்டி கடைகள் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர் .
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு சுமார் ரூ.3 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது. இதனை திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன.
இந்நிலையில் பேருந்து நிலையத்தில் தள்ளுவண்டி வியாபாரிகள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளதால், பேருந்துகள் செல்ல முடியாமல் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகையால் போக்குவரத்து காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வியாபாரம் செய்யும் தள்ளுவண்டி கடைகளுக்கு அபராதம் விதித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.